ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டம் மூலம் தமிழ்நாடு அடைந்தது என்ன? தேசிய மாநாட்டில் விளக்கிய அமைச்சர் சக்கரபாணி! 

02:54 PM Jul 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உணவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்தவகையில், இந்த மாநாட்டில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது; “தமிழ்நாடு அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப்பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எங்கள் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

மேலும், அன்றைய முதல்வர் கலைஞரால் பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டத்தின் கீழ் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்கும் திட்டம் 2919ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு முட்டை வழங்கும் வகையில் இத்திடம் விரிவுபடுத்தப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருள்களும், ரூ.4000 ரொக்கத் தொகையும், 2020 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியதோடு 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 வகையான ஊட்டச் சத்துள்ள உணவுப் பொருள்களையும் வழங்கியது. தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98 சதவிகித கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக் குறியீடு அறிக்கையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 சதவிகித மட்டுமே ஏழ்மையில் உள்ளனர். ஆனால், இந்தியா முழுமைக்கும் 25.01 சதவிகித பேர்கள் ஏழைகளாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருப்பது இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் ஒன்றிய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து நம் நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட உறுதுணை புரிவோம்” என்று கூறினார்.


இந்த மாநாட்டில் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT