Skip to main content

"பஸ்சுக்குப் போகாதீங்க, நாங்க ஃப்ரீயா கூட்டிப் போறோம்..." - கூவி அழைத்த மெட்ரோ நிர்வாகம்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

அண்மையில் சென்னை நேரு பூங்காவிலிருந்து சென்ட்ரல், சின்னமலையிலிருந்து டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை தமிழக அரசு திறந்து வைத்தது. சென்னைவாசிகளுக்கு பயண உற்சாகத்தைப் பரிசளிக்க மூன்று நாள் இலவச பயணத்திற்கும் ஏற்பாடு செய்தது. மூன்று நாட்களாகவே எக்கச்சக்க கூட்டம் குவிந்தாலும், நேற்று கூட்டம் அதிகமாகக் குவிந்தது. அதாவது ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர் நேற்று மட்டும் பயணித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

metro

 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலோ என்னவோ தெரியவில்லை நேற்று இவ்வளவு கூட்டம் குவிந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு என்பதால் எல்லாத்தரப்பு மக்களும் உற்சாகமாகப் பயணித்தனர். முதல் நாள் இலவச பயணத்திற்கு மெட்ரோ நிர்வாகமே மக்களை கூவிக் கூவி அழைத்தது கிண்டல் செய்யப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்ட்ரல், ப்ராட்வே செல்ல பேருந்துக்குக் காத்திருந்த மக்களை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் மெட்ரோ பணியாளர்கள்.  அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை குவிந்த கூட்டம் மெட்ரோவுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என மெட்ரோ நிர்வாகம் மெச்சியது. மகிழ்ச்சியில் இன்றும் பயணம் இலவசம் என அறிவித்துள்ளது.

 

metro



மெட்ரோ ரயில் பயணம் பற்றிய மக்களின் கருத்துக்களைக் கேட்டோம். இரண்டு சிறுவர்களை அழைத்து வந்த ஒருவர், "அருமையா இருக்கு, போறதே தெரில, சொய்ங்னு போகுது" என்றார். அடுத்து வந்த நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டோம். "உள்ளே ஆங்காங்கே திருக்குறள் வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எளிதில் செல்லவேண்டிய இடத்தை அடைந்து விடுகிறது. இடம் வந்ததும் அறிவிப்பும் தருகிறார்கள்" என்றார். பின்னே வந்த வாலிபரிடம் பயணம் எப்படியென்று கேட்டோம். "ட்ரெயின்ல போகும்போது சிக்னலே கிடைக்கல பாஸ்" என்றார். அண்டர்க்ரௌண்டில் செல்லும்போது கிடைத்திருக்காது போல. 'என்னதான் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கட்டணம். இன்று பயணம் செய்துவிட்டோம், நாளை முடியுமா?' என்பது பயணம் செய்த பலரால் சொல்லப்பட்ட கருத்து. அதுவும் உண்மைதான். 

 

metro

 

நாளை உரிய கட்டணத்துடன்தான் பயணம் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை செல்ல 70 ரூபாய், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்ல 50 ரூபாய், எக்மோரிலிருந்து விமான நிலையம் வரை 60 ரூபாய் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இலவச பயணத்தினால் அடித்துத்தட்டு மக்களை நான்கு நாட்களாக பயணம் செய்தவைத்த மெட்ரோ, அதை தக்க வைத்துக்கொள்ள கட்டணத்தை குறைக்க முற்படுமா அல்லது தொடர்ந்து அதிக கட்டணம், குறைந்த பயணிகள், சினிமா ஷூட்டிங் என செயல்படுமா என்பது போகப் போகத் தெரியும். 

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

சோதனை முயற்சி; சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
trial attempt; Traffic change in Chennai tomorrow

சென்னையில் மெட்ரோ பணி காரணமாக சோதனை ஓட்டமாக பல இடங்களில் நாளை  போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய பகுதிகளில் மூன்றாம் தேதி மட்டும் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சேத்துப்பட்டிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியே வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் செல்லும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.