கடந்த டிசம்பர் மாதம்...
இன்று விடுமுறை நாளாயிற்றே படத்திற்கு போகலாம் என நினைத்து படத்திற்கு சென்றேன். படமும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. திடீரென இடைவெளி வந்தது. என்ன செய்வது டிக்கெட் வாங்குவதற்கே சிக்கனமாக செலவு செய்து மிச்சப்படுத்தவேண்டி உள்ளது. இதில் எங்கிருந்து ஸ்நாக்ஸ் வாங்க செல்வது என்று அங்கேயே அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் ஒருவன் என ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தனர். எப்போதும் இடைவெளியில் விளம்பரம் வருவது சகஜம்தான் ஆனால் இந்த விளம்பரம் சகிக்க முடியாததாக இருந்தது. (அப்படியென்ன விளம்பரமாய் இருக்கும் என கண்டதை நினைக்காதீர்கள் நானே சொல்கிறேன்.) தமிழ்நாடு அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் விளம்பரம்தான் அது. ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும்வரை சாதனைகள் எனவும், ஜெயலலிதா இறந்தபின்பு அம்மா, அம்மா எனவும், அதன்பின் ஒருவருட கூத்தான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளம்பரமும் போட்டவர்கள்தான் அவர்கள் இந்தமுறை வேறெதுவும் கிடைக்காததால் ஒகி புயலை உள்ளே இழுத்துவிட்டுள்ளனர்.
காணாமல்போன மீனவர்கள் குறித்த தப்பான கணக்கு அளித்தது, புயல் வடிந்து காய்ந்த பின்பு வந்து முதலமைச்சர் இடங்களை பார்வையிட்டது மற்றும் மத்தியகுழு ஆய்வு செய்தது. என அனைத்துமே காலதாமதமாகதான் நடந்தது. அப்படியிருக்கையில் அவர்கள் இப்படி முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டோம் என கூறியது அரசின் நாடகத்தை காட்டியது. கடைகோடியில் இருப்பதால் யார் கண்ணுக்கும் தெரியாதவர்கள் கிறித்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் என எதையும் கொண்டாடாமல் கடலை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிதி அவர்களைச்சென்று அடைந்ததா என்ற கேள்விக்கு உள்ளூர் முதல் உலகநாடுகளை சுற்றிக்கொண்டிருக்கும் அரசு பொறுப்பிலிருக்கும் யாரிடமும் பதில் இல்லை. அப்படி இருக்கையில் ஒருவரின் குமுறலை டப்பிங் செய்து ஒளிபரப்புவது. இதை என்னவென்று சொல்வது.
இப்படி ஒரு அரசு நமக்கு தேவைதானா என்ற எண்ணம் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று இருந்தது. மத்தியில் ஒருவர் தரும் விளம்பரங்களைவிட இது மிகப்பெரிய விளம்பரமாக உள்ளது. உண்மை நிலவரம் எப்படியோ இருக்கட்டும், விளம்பரங்களை வைத்தும் ஊடகங்களை வைத்தும் சரிகட்டிக் கொள்ளலாம் என்று அரசுகள் நினைப்பது ஒரு காரணம். இன்னொன்று, ஆள்பவர்களை இப்படி சாமியாக்கி, எந்த எல்லைக்கும் சென்று குளிர்வித்துவிட்டு, தாங்கள் நினைத்தபடி செல்வம் சேர்க்கும் அதிகாரிகள் பெருகியிருப்பது இன்னொரு காரணம்.