Skip to main content

கலைஞர் செய்து காட்டியதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா? | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #3

Published on 30/03/2021 | Edited on 05/04/2021

 

Tamil Nadu Election 1971 History

 

பிப். 3, 1969ஆம் ஆண்டு திமுக தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பு ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதுவரை கட்சியை வழிநடத்திய பொதுச்செயலாளரும், 1967ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை வழிநடத்திவந்த தமிழக முதல்வருமான அண்ணா மறைந்தார். அன்றைய ஆளுநர் உஜ்ஜல்சிங், திமுக மூத்த தலைவர் நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக நியமனம் செய்தார். அதேவேளையில், முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் நெடுஞ்செழியன். அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அமைச்சர் கே.ஏ. மதியழகன் கலைஞரை முதல்வராக முன்மொழிந்தார். அப்போது எஸ்.ஜே. ராமசாமி, நெடுஞ்செழியன் பெயரை முன்மொழிந்தார். இதனால், முதல்வர் பதவிக்கான வாக்கெடுப்புக்குப் போகவேண்டிய சூழ்நிலை உருவானது. அதே கனம் நெடுஞ்செழியன், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் முதல்வராக தயார்; இல்லை என்றால் எனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று மறுத்தார்.

 

பெரும் புயலுக்குப்பின் அமைதியாக கலைஞர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பதவியேற்புக்கு முன்னதாக கலைஞர், முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறிவந்தார். அமைச்சர்கள் மதியழகன், சத்யவாணி முத்து, சாதிக்பாட்சா எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர், “நீங்க தான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கலைஞரை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்துதான் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கே வந்ததாக, கலைஞர் தனது 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். ஏகமனதாக முதல்வரானாலும், 1971ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் திமுக தேர்தலை சந்திக்கிறது. 67-ல் வெற்றிபெற்ற திமுகவின் ஆட்சிக் காலம் 72-ல் முடியவேண்டியது. ஆனால், ஆட்சி முடிய ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார் கலைஞர். மக்கள் மத்தியில் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராகக் கலைஞர் களமிறங்குகிறார். திமுக கூட்டணி 205 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றிகண்டது. இதில், திமுக மட்டும் 184 தொகுதிகளை வென்றது. இந்தத் தேர்தலில், தேசிய காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது.

 

Tamil Nadu Election 1971 History

 

1971-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞருக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்தது. இதற்கு, மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதனைச் சமாளித்து கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அன்றே சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் மாணவர்களை தாக்கினர். அதனைத் தொடர்ந்து மறுநாள் உடல் மற்றும் முகம் வீங்கிய நிலையில் ஒரு மாணவனின் சடலம் கல்லூரி அருகே இருந்த குளத்தில் மிதந்தது. அதே கலவரத்தில் உதயகுமார் எனும் மாணவன் மாயமானார். குளத்தில் இருந்த சடலம் மாணவர் உதயகுமார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். மாணவர்களின் எழுச்சி, மாணவர்களின் போராட்டம், மாணவர்களின் ஆதரவு என ஆட்சிக்குவந்தது திமுக. ஆனால், அதே திமுக ஆட்சியில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் கரும்புள்ளியாக விழுந்தது.

 

அதற்கடுத்து மதுவிலக்கு பிரச்சனை; கடந்த 2016 தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை முக்கியத்துவப்படுத்தினர். இந்தத் தேர்தலில் மது ஆலைகள் யாருடையது, யார் தமிழகத்தில் மது விலக்கு தளர்வுகளைக் கொண்டுவந்தது என விவாதங்கள் அனல் பறந்தது. '1971 ஆட்சியில் கலைஞர் தலைமையிலான அரசு மதுவிலக்கு தளர்வுகளைக் கொண்டுவந்தது அதனால்தான், தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது' எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. 1971 திமுக ஆட்சியில் மதுவிலக்கு தளர்வு கொண்டுவரப்பட்டதே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த மதுவிலக்கு தளர்வுகள் எவ்வளவு காலம் நீடித்தது?

 

1937ஆம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்தபோது சென்னை மாகாணத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி 1971ல் தமிழகத்தில் மது விலக்கிற்கு தளர்வைக் கொண்டுவந்தார் அன்றைய முதல்வர் கலைஞர். பெரும் இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மதுவிலக்கில் தளர்வு ஏற்பட்டது. உண்மையில், 1971ல் மதுவிலக்கு தளர்வு கொண்டுவந்த திமுக, அதே ஆட்சிக் காலத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியது. அதன்பின், 1977ல் அமைந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981ஆம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு தளர்வு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், 1983 ஆம் ஆண்டு மதுபானங்களை மொத்த வியாபாரம் செய்யும் வகையில், 'டாஸ்மாக்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் சில்லறை வணிகம் செய்யும் உரிமையை 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வழங்கியது. ஆனாலும் திமுகவின் மதுவிலக்கு தளர்வு இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

Tamil Nadu Election 1971 History

 

1972ஆம் ஆண்டு கட்சியின் சொத்துவிவரங்களைக் கேட்டு பொதுவெளியில் எம்.ஜி.ஆர். பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் முதலில் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டார். 14 அக்டோபர் 1972 அன்று, எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு, அக்டோபர் 17 ஆம் தேதி, எம்.ஜி.ஆர்., 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் புதிய கட்சியைத் துவங்கினார். அதன்பிறகு, கலைஞர் உள்ளிட்ட அமைச்சரவை மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் கொண்ட பட்டியலை அன்றைய ஆளுநர் கே.கே.ஷாவிடம் கொடுத்தார். ஆனால், 'அது எப்படியும் முதல்வர் பார்வைக்குச் சென்றுதான் குடியரசுத் தலைவருக்குச் செல்லும்' எனும் விவரம் அறிந்ததும் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பின்னர், சிறிது காலம் கழித்து நேரடியாக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் கொடுத்தார். அதன்மூலம், பிரதமர் இந்திராவிடம் சென்ற அந்தப் புகார்ப் பட்டியல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு மத்திய அரசின் அதிகாரத்திற்கும் மாநில அரசின் உரிமைக்கும் நடந்தபோரில், மத்திய அரசின் அதிகார பலம் மாநில அரசின் உரிமையை நசுக்கி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது.

 

கச்சத்தீவு விவகாரம் கலைஞரையும், திமுகவையும் கலங்கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்திய அரசையே கலைக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆம், 1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதி வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்ததும், இந்தியாவில் பத்திரிகைகளுக்குக் கடிவாளம் கட்டப்பட்டது. மத்திய அரசை விமர்சித்தாலோ, கண்டனங்கள் தெரிவித்தாலோ, போராட்டங்கள் நடத்தினாலோ சிறை! ஓர் இந்தியரின் தலைமையில் ஆங்கிலேயரின் ஆட்சி மீண்டும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. இந்தியா முழுக்க நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நேரு கொண்டுவந்த பிரிவினை தடுப்புச் சட்டத்தின்போது அண்ணா மாற்றிக்கொண்டது திராவிட நாடு கொள்கையை மட்டுமே. ஆனால், 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்பதில் விடாப்பிடியாகவே இருந்தார் அண்ணா. அவர் வழி வந்த கலைஞரும் அதையே முழங்கினார்.

 

Tamil Nadu Election 1971 History

 

அதனால், நெருக்கடி நிலையில் மத்திய அரசின் கை ஓங்கியபோது, அதனைத் தன் பேனாவினாலும், போராட்டத்தினாலும் அடக்க முயன்றார் கலைஞர். விளைவு, தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு, கலைஞர் மீதும் திமுக ஆட்சியின் மீதும் எம்.ஜி.ஆர்., கொடுத்த ஊழல் புகார் தூசி தட்டி எடுக்கப்பட்டு சர்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் நீட்சியாக இந்த ஆட்சிக் கலைப்பு அரங்கேற்றப்பட்டது.

 

இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்ததால், மாநிலக் கட்சிகளை மத்திய அரசு தடைசெய்ய திட்டம் தீட்டி வருகிறது என செய்தி வெளியானது. மாநிலக் கட்சிகளுக்குத் தானே தடை என்று எம்.ஜி.ஆர்., மாநில சுயாட்சியை உயிர்மூச்சாக முழங்கிய அண்ணாவின் பெயரில், தொடங்கிய அதிமுகவை, அ.இ.அ.தி.மு.க. எனப் பெயர் மாற்றம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த 1977 சட்டசபைத் தேர்தலில் அதிமுக இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மதுவிலக்கு, அதிமுக உருவாக்கம், எம்.ஜி.ஆர். கொடுத்த ஊழல் புகார், அதன் மீது இந்திரா தொடுத்த 'சர்காரியா கமிஷன்' என எல்லாம் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு சாதகமாகவும் அமைந்தன.

 

1969-ல் மக்களால் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத கலைஞர், 1971 தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கி 184 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெற வைத்து முதல்வரானார். மக்களால் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத எடப்பாடி, மக்கள் மத்தியில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் காலத்தைப் போலவே மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால், கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக 1969ல் இருந்து 1971 வரை கலைஞர் செய்ததும், 2017ல் இருந்து 2021 வரை பழனிசாமி செய்ததும் ஒரே மாதிரியான ஆட்சியா என மக்கள் முடிவு செய்வார்கள்.

 


திமுக ஆட்சியைப் பிடிக்க மொழி மட்டும்தான் காரணமா? அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. #2

 

தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.