ADVERTISEMENT

தூத்துக்குடியில் மீண்டும் வேதா(ந்தா)ளம்...!! கதை சொல்லும் அரசுகள்...!!

02:17 PM Mar 10, 2019 | nagendran


ADVERTISEMENT

தூத்துக்குடி என்றாலே துயரமும், துடிப்புமிக்க ஏதோ ஒரு செயலும் நிகழ்ந்து பரபரப்பிற்கு உள்ளாகும் பின்பு மறைந்தோடும். ஆனால் கடந்த ஆண்டு மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலை எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்களும், துப்பாக்கி சூடு சம்பவத்தில் 14 பேரின் இறப்பின் துயரங்களும் பல மாதங்களாகியும் இன்றளவும் மறக்காமல் நீர் பூத்த நெருப்பாக அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளது தூத்துக்குடியில்.

ADVERTISEMENT

சிபிஐ விசாரணை, ஒரு நபர் விசாரணை கமிஷன் என துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு நியாயமான அறிக்கை கூட வராத நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசுமும் அதிகாரிகளும் வேகம் காட்டுவதை பொது மக்கள் பார்க்கும் போது தான் அவர்களுக்குள்ளான மனகுமுறல் அதிகரிக்கின்றன.

உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. அப்படியொரு அரசாணை தமிழக அரசு போட்டுள்ளது என கூறிய தமிழக அமைச்சரின் பேட்டி அறிக்கைக்கு இடையே கடந்த டிசம்பர் 15 அன்று பசுமை தீர்ப்பாய உத்தரவில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படலாம் என சில கோரிக்கைகளை நிறைவேற்றும் நிபந்தனையுடன் தீர்ப்பினை வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டதற்கு தடையாணை பெற்றதும், அதனை உச்சநீதிமன்றம் தகர்த்தெறிந்த நிலையில் தான் தமிழக அரசு மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, நோய் தொற்று போன்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டாமல் உப்பாற்று ஓடையில் மண்ணை கொட்டியுள்ளது மிகப்பெரிய தவறென்றும், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்கிறார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது போன்ற மென்மையான ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் விதமாகவே அரசு தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக அளித்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எவ்வித நிகழ்வும் போராட்டங்களும் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்கிற ஒற்றை பணியே தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பணி என்பதை போல் தூத்துக்குடியின் ஒவ்வொரு காவல் அதிகாரிகளும் இயங்கி வருகின்றனர். அதற்கு சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள், " ஸ்டெர்லைட் ஆலை சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருவதோடு ஸ்டெர்லைட் தொடர்பாக ஏதேனும் நீதிமன்ற விசாரணை தினம் வந்து விட்டால் வெளிமாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு காவல்நிலைய கண்காணிப்பில் 35 காவலர்கள் என பல்லாயிரக்கணக்கான போலிசாரை தூத்துக்குடியில் இறக்கி பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாத சூழலை ஏற்படுத்துகின்றனர் காவல் துறையினர். இவை ஒருபுறமிருக்க பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதை போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எவ்வித போராட்டங்களும் தூத்துக்குடி நகர பகுதிகளில் நடக்க அனுமதிக்க கூடாது என்பதற்கு ஆலை நிர்வாகம் மூலமாகவே நீதிமன்ற உத்தரவு நகலினை பெற்று விட்டு " நாங்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் இருப்பினும் நீங்கள் நீதிமன்றம் சென்று போராட்ட அனுமதியை பெற்றுக்கொள்ளுங்ஙள் என கூறுவதோடு போராட்ட அனுமதி தொடர்பான மனுக்களை பெற மறுப்பதும்,தூத்துக்குடியில் நடைபெற உள்ள போராட்ட அனுமதி மனுவினை திருநெல்வேலி துணை காவல் துறை தலைவரிடம் அளியுங்கள் என கூறுவது வேடிக்கையான தூத்துக்குடி காவல்துறையினர் செயல்பாடு.

காவல் துறையினர் மேல் உள்ள துப்பாக்கி சூடு களங்கத்தை துடைக்க பல்வேறு அடக்குமுறைகள், மிரட்டல்கள், விசாரணைகள்,பொய் வழக்குகள்,சிறையில் அடைப்பு என தங்களின் ஸ்டெர்லைட் விசுவாச பணியை சந்தனம் என நினைத்து மீண்டும் மீண்டும் தங்கள் மேல் சாக்கடைகளை அள்ளி பூசிக் கொள்ளது காவல்துறையினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் போலிசாரின் ஒவ்வொரு அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர் பொது மக்கள்.சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னுயிரை தியாகம் செய்ய 14 உயிர்களுக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை,அது தொடர்பாக ஒரு துண்டறிக்கை விநியோகிக்க முடியவில்லை நாமென்ன அடிமை நாடுகளில் வாழ்கிறோமா என்கிற கேள்வியை காவல் துறையினர் எழ செய்வதாக தூத்துக்குடியின் மீனவ மக்களும் பண்டாரம்பட்டி போன்ற கிராம மக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூலம் தங்களுக்கு பல்வேறு உடற்கூறு நோய்கள் ஏற்படுகிறது என்ற நிலை மக்களிடையே மாறாதிருக்கிறது. அதற்காகவும் பின் வரும் இளம் தலைமுறையினரின் வாழ்வினை பாதுகாக்கவும் எந்த வித உயிர் தியாக போராட்டங்களிலும் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்பது நகர பகுதிகளில் மட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணவோட்டங்களும் இதுவாகவே உள்ளது. இவ்வாறான மக்களின் மனநிலையை மாற்ற தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ரகசிய கூட்டம் நடத்தி மீன்வளத்துறை, போக்குவரத்து துறை, வருவாய் துறை, காவல்துறையினர் சேர்ந்து பொது மக்களின் பிரச்சினைகளை தாமே முன்வந்து கண்டறிந்து அதனை எவ்வித நிபந்தனையின்றி மக்களுக்கான வசதிதனை செய்துக் கொடுக்க வேண்டும் என்கிற முடிவில் தான் மீனவர்களுக்கு சுமார் மூவாயிரம் படகிற்கு ஓட்டுநர்/பணி பயிற்சி சான்றுகளும், வியாபாரிகள் சங்கத்தினை அழைத்து உங்களுக்கான வசதிகளையும், குறைபாடுகளையும் தீர்ப்போன் என உறுதியளித்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுத்தமான குடிநீர் வசதியினை எற்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு உடனடி வேலைகள் நடந்தேறியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான சமூக செயற்பாட்டாளர் அக்ரி பரமசிவனோ, " "பூட்டிய ஸ்டெர்லைட் கதவு தானே திறக்கும் என மே மாத இறுதியிலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காகவே எடப்பாடி போட்ட அரசாணை என டிசம்பர் மாதங்களிலும் தனது முன்னோட்ட நக்கீரன் செய்தியை போலவே தற்போதைய தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற செயல்பாடுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மீண்டும் அதனை வெளிப்படுத்தும் விதமாக பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15 அன்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் எவ்வித முன்னோட்ட கருத்தினை கேட்காமல் மூடியது தவறென ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்தில் திறக்கலாம் என கூறி சில சூழலியல் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தூத்துக்குடி மக்களிடையே மட்டுமல்லாது தமிழக மக்களிடையேயும் அதனை சார்ந்த ஒற்றை கருத்தே வெளிப்படுகிறது. ஆலையை திறக்கவே முடியாது அது தமிழக அரசின் கொள்கை முடிவென கூறியவர்கள் தற்போது மௌனம் காத்து வருகின்றனர். அவ்வாறான மௌனத்திற்கு விடை சொல்லும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது. வேதாளமென மீண்டும் ஏறிய ஸ்டெர்லைட் ஆலையையும் விக்கிரமாதித்தன் கூறும் கதை போல மத்திய மாநில அரசின் செயல்படுகளுக்கு இடையே தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்ட களங்களை வகுத்து வருவதை உளவுத்துறையினர் கூட கண்டறியாத நிலை.இதுவரை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தது அதனாலே எங்களின் போராட்ட வெளிப்பாட்டை காட்டவில்லை 14 உயிர்களை வேதாந்தா நிறுவனத்திற்கு காவு கொடுத்த பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் திறக்கப்படுமேயானால் அதன் விளைவுகளை மிக பெரிய அளவில் சந்திக்க நேரிடும் என்பதை மட்டும் மனகுமுறலாக கொப்பளிக்கின்றனர் தூத்துக்குடி மக்கள்." என்கிறார் அவர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT