ADVERTISEMENT

எடப்பாடி அரசு என்னை மிரட்டிப் பார்க்கிறது! -தங்கத்தமிழ்ச்செல்வனின் பகீர் பேட்டி!!!

04:29 PM Jun 29, 2018 | Anonymous (not verified)

டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களும் விதிமுறைகளை மீறி செயல்பட்டனர் என்று கூறி அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார்.

ஆனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இந்த 18 பேரும் எங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் பெஞ்சில் இருதரப்பு விசாரணைக்கு பிறகு கடந்த 14ம் தேதி இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும் தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான சுந்தரோ சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.

இப்படி இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்த காரணத்தால் இந்த வழக்கு விசாரணையை மூன்றாவது நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணனையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. இப்படி இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு கூறியதை கண்டு தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் அதை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதோடு மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றங்களை விலைக்கு வாங்கிவிட்டன என பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார். இதற்கு நீதிமன்ற அமைப்புகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் பெண் வக்கீல் ஸ்ரீமதி சென்னை ஐகோர்ட்டில் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது கோர்ட் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளர்.

அந்த மனுவில் ஸ்ரீமதி கூறியிருப்பதாவது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானதை தங்கத்தமிழ்ச்செல்வன் மிக மிக தரக்குறைவான வகையில் மீடியாக்களில் விமர்சனம் செய்துள்ளார். அதுபோல் தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சி நீடிக்க உதவவே ஐகோர்ட் தீர்ப்பளித்தது இது விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு போல் தெரிகிறது என்று கூறினார்.

மேலும் சென்னை ஐகோர்ட்டையும், தலைமை நீதிபதியையும் அவர் மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் கீழ்த்தரமாகவும் விமர்ச்சித்துள்ளார். அதோடு மத்திய, மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிபதிகள் சதி செய்வதாகவும், மத்திய, மாநில அரசுகளின் கைகளில் நீதிபதிகள் அடகு வைக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.



இப்படி வக்கீல் ஸ்ரீமதி கொடுத்த கோர்ட் அவமதிப்பு வழக்கை அரசு தலைமை வக்கீலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அரசு தலைமை வக்கீல் விஜயநாராயணன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி விமர்சித்து பேசியதை பற்றி இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக நேரில் ஆஜராக வேண்டும். அல்லது வக்கீல் மூலம் பதிலளிக்கலாம் என்றும் கூறினார்.

இப்படி தங்கத்தமிழ்ச்வெல்னுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு வரும் ஜீலை 2 வாரத்திற்குள் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அவரிடம் விசாரணையும் நடத்தப்படும். அதை தொடர்ந்து தங்கத்தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டுகள் அவமதிப்பு சட்டம் 1971 பிரிவில் 15ன் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

இப்படி அரசு வக்கீல் நோட்டீசை அனுப்பியதை பற்றி டி.டி.வி. ஆதரவாளரான தங்கத்தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது,

முதன் முதலில் சட்டசபையில் நான் அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களித்தேன். அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பி.எஸ். இது உலகத்திற்கே தெரியும். இந்த ஓ.பி.எஸ். உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 11 எம்.எல்.ஏ.க்களுமே மாற்றித்தான் ஒட்டு போட்டார்கள். அப்படி அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியிருந்தால் தீர்ப்பை வரவேற்றிருந்திருப்பேன்.

அதை சொல்லாமல் சபாநாயகர் விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறிவிட்டார்கள். ஆனால் நான் உண்மையைச் சொன்னால் கோர்ட் அவமதிப்பு என்று எனக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். நான் அதற்கு பயப்பட போவதில்லை. விளக்கம் அளிப்பேன் அதோடு நான் அரசு வக்கீலை பார்த்து கேட்கிறேன். சட்டம் அனைவருக்கும் சமம். பொதுமக்கள் இறுதியாக நம்பும் இடம் நீதிமன்றங்கள் தான். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இந்த எடப்பாடி அரசை கவிழ்க்க எதிர்த்து வாக்களித்தார்கள். அப்படி அவர்கள்செய்தது சரியா? தவறா? என்பது நீதிமன்றம் ஏன் கூறவில்லை. அதையெல்லாம் விளக்கமாக சொல்லாமல் தீர்ப்பு கூறினால் எப்படி நீதிபதி தீர்ப்பை விமர்சசிக்க கூடாது என்கிறார்கள்.


அப்படியானால் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாலு பேர் கருத்து தெரிவித்தார்களே? அவர்களுக்க ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் என்பதால் பயமா? நான் ஒரு சாதாரண குடிமகன் என்பதால் எனக்கு நோட்டீஸ் அனுப்பி என்னை இந்த அரசு மிரட்டப் பார்க்கிறது. அதற்கு ஒரு போதும் நான் பயப்பட போவதில்லை சட்டம் எல்லோருக்கும் சமம். இதுவரை அரசு வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு வரவில்லை. வந்தால் இதையெல்லாம் விளக்கமாக கோர்ட்டில் எடுத்துச்சொல்வேன் என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT