ADVERTISEMENT

திருவாரூரில் தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!

12:26 PM Jun 10, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆக்ராவில் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினார் ஷாஜஹான். திருவாரூரில் பெற்று வளர்த்த தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டியுள்ளார் மகன். தென்னகத்தின் தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில் ஷேக்தாவுது - ஜெய்லானி பீவி தம்பதியருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். ஷேக்தாவுது - ஜெய்லானி பீவி தம்பதியரின் மகனான அமுர்தீன் (49), சென்னையில் தொழிலதிபராக உள்ளார்.

அமுர்தீனின் தந்தை ஷேக்தாவுது பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில், தாய் ஜெய்லானி பீவி கடந்த 2020 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அமுர்தீன் தனது தாயார் ஜெய்லானி பீவிக்கு அம்மையப்பன் கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என விரும்பி உள்ளார். அப்போது தனது கிராமத்தின் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர், தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செலுத்தி வந்தது போன்று, தானும் தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் அவருக்கு நினைவிடத்தை அமைக்கத் தீர்மானித்தார்.

காதல் மனைவிக்காக ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது போன்று தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் ஆக்ராவில் உள்ள முகலாய மன்னர் கால கட்டமைப்பைப் போன்றே தானும் கட்ட முடிவு செய்தார் அமுர்தீன். அதற்காக அவர் தாஜ்மஹால் வடிவத்தையே தேர்வும் செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள ஒரு கட்டட வடிவமைப்பாளரை அமுர்தீன் அணுகி தன் திட்டத்தைச் சொன்னார். அந்த கட்டட வடிவமைப்பாளர் அமுர்தீன் நினைத்தபடியே தாஜ்மஹால் வடிவத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

அதன்பின் கட்டடப் பணியைத் துவங்கிய அமுர்தீன், தென்னக தாஜ்மஹாலுக்காக ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்குக் கற்களைக் கொண்டு வந்தார். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், 8 ஆயிரம் சதுர அடியில், ரூ. 5 கோடி மதிப்பில், இரண்டு ஆண்டுகளாகத் தனது தாய் ஜெய்லானி பீவியின் நினைவாகக் கட்டப்பட்டு வந்த தாஜ்மஹாலை கடந்த 2 ஆம் தேதி எளிமையாகத் திறந்தார்.

இதில் தனது தாயாரின் சமாதியையும் அமுர்தீன் அமைத்துள்ளார். மேலும், அந்த தாஜ்மஹாலில் ஒருபுறம் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டடமும், மறுபுறம் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் மதர்ஸா கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குச் சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்க்க அனைவராலும் முடியாத நிலையில், தென் தமிழகத்தில் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட முதல் தாஜ் மஹாலை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஜெய்லானி பீவி நினைவாகக் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலை அனைத்து சமுதாய மக்களும் பார்வையிட அவர் அனுமதித்துள்ளார். தற்போது அருகே உள்ள கிராம மக்கள் இந்த தாஜ்மஹாலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தனது தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டிய மகனைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT