ADVERTISEMENT

தொகுதிக்கு இவ்வளவு கோடியா ? எடப்பாடி கணக்கு

02:56 PM Feb 20, 2019 | Anonymous (not verified)

பாகிஸ்தானுடன் போர் நடத்தி எளிதாக ஜெயித்து அதன்மூலம் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துவிடலாம். ஆனால் அ.தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது அதைவிட கடுமையான யுத்தமாக இருக்கிறது'' என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

இத்தனைக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை பிரதமர் மோடிதான் தொடங்கினார். அதன்பிறகு அமித்ஷா வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு நிர்மலா சீதாராமன் கைக்குப் போய் கடைசியில் பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை களத்திற்கு வந்தார். பியூஷ்கோயலும் எடப்பாடியும் மிகவும் நெருக்கமானவர்கள். எடப்பாடியிடமிருந்து எதைப் பெறவேண்டுமென்றாலும் மோடியும் அமித்ஷாவும் பியூஷ்கோயலிடம்தான் சொல்வார்கள். அதை முடித்துவிட்டு, பிரதிஉபகாரங்களையும் செய்து தருவார். ஆனாலும் கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவுக்கு உடனடியாக வரமுடியவில்லை. மோடி டென்ஷனடைந்தார். கன்னியாகுமரியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை மார்ச் மாதம் 1-ஆம் தேதி மாற்றியமைத்தார். அதற்குள்ளாவது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடியுங்கள் என மோடி திட்டியதன் விளைவாக பியூஷ்கோயல் சென்னைக்கு பறந்துவந்தார் என விளக்குகிறார்கள் பா.ஜ.க.வினர்.

பியூஷ்கோயல் வருகையை அறிந்ததும் தனது ஆபத்பாந்தவர்களான ஜக்கிவாசுதேவையும் கேரள கவர்னர் சதாசிவத்தையும் தொடர்புகொண்டார் எடப்பாடி. ஜக்கி, மோடியிடம் பேசினார். சதாசிவம், அமித்ஷாவிடம் பேசினார். அதன் தொடர்ச்சி யான ஏற்பாட்டில் கொங்கு மண்டல தொழிலதிபரான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் விருந்தினர் மாளிகையில் பியூஷ்கோயல், அ.தி.மு.க.வினரை சந்திக்க தயாரானார். அதற்குமுன், தமிழக பா.ஜ.க.வினருடன் ஒரு குட்டி ரவுண்டு பேச்சுவார்த்தையை நடத்தினார் பியூஷ். அதில் பா.ஜ.க. கொங்குமண்டலத் தில் அதிக இடங்களில் போட்டியிட்டால் தான் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி வெற்றிபெற முடியும். அத்துடன் மோடியின் பொதுக்கூட்ட ஸ்பாட்களான மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி கட்டாயம் வேண்டும். பா.ஜ.க.வை பாராளுமன்றத்தில் இழிவாகப் பேசிய அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரத்தில் சீட் கொடுக்கக்கூடாது. பா.ஜ.க. தொண்டர்கள், தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். தென்சென்னையில் பா.ஜ.க.வின் கணக்கை தொடங்கவேண்டும். கோவை நாம் வலுவாக உள்ள இடம். கோவை இல்லையென்றால் பொள்ளாச்சி, திருச்சி அல்லது தஞ்சாவூர் மற்றும் கிருஷ்ணகிரி, எச்.ராஜாவுக்காக சிவகங்கை என பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பியூஷ்கோயலிடம் பட்டியலிட்டனர் பா.ஜ.க.வினர்.

"இதைப்பற்றிப் பேச அ.தி.மு.க.விலிருந்து யார் வருகிறார்கள்' என பியூஷ்கோயல் கேட்டபோது, பியூஷின் நல்ல நண்பரான எடப்பாடி, முன்னாள் நண்பரான ஓ.பி.எஸ்., ஏற்கனவே பியூஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய தங்கமணி, வேலுமணி... இவர்களுடன் பா.ம.க.விடம் பேசிவரும் கே.பி.முனுசாமி ஆகியோர் பொள்ளாச்சி மகா லிங்கத்தின் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். முதல் பிரச்சினையாக பாண்டிச்சேரி எடுத்துக்கொள்ளப்பட்டது. பா.ம.க.விடம் கூட்டணி பேசிய கே.பி.முனுசாமி பாண்டியை பா.ம.க.விற்கு தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி நேரடியாக எடப்பாடியை சந்தித்தார்.

""பா.ம.க.விற்கு புதுச்சேரி வேண்டாம். அது ரங்கசாமி கட்சிக்குத்தான். பா.ம.க.விற்கு பாண்டி வேண்டுமென்று அடம் பிடித்தால் அவர்கள் கேட்ட ராஜ்யசபா சீட்டை ரங்கசாமிக்கு கொடுப்போம்'' என கறாராகச் சொல்லிவிட்டார் எடப்பாடி. இதற்கு ஓ.பி.எஸ். ஒன்றும் சொல்லவில்லை.

""பா.ம.க., தி.மு.க.விடம் 5 எம்.பி. சீட், ஒரு ராஜ்யசபா கேட்கிறது. எங்களிடம் 6 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்கிறது'' என பா.ம.க.வுடன் நடந்த பேச்சுகளை பியூஷ்கோயலிடம் அ.தி.மு.க. விளக்க... அங்கிருந்தபடியே பியூஷ்கோயல், பா.ம.க. தரப்பிடம் பேசியதால் பேச்சுவார்த்தை நீண்டது. இறுதியில் பா.ம.க.விற்கு 4 சீட், ஒரு ராஜ்யசபா என உறுதியளிக்கப் பட்டது. அதன்பின் பியூஷ், எடப்பாடியிடம் தேர்தல் செலவுகள் பற்றிய திட்டத்தைக் கேட்டார்.

"நாங்கள் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் 30 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் கூடுத லாக 6 கோடி ரூபாய் செலவு செய்வார்கள்'' என கூட்ட ணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் உட்பட மொத் தம் 1350 கோடி ரூபாய் அ.தி.மு.க.வின் தேர்தல் பட்ஜெட். இடைத்தேர்தலை சந்திக்கும் 20 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகள். "அந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் கட்டா யம் தேர்தல் நடத்துவோம்' என மதுரை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆட்சி யைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற் கும் செலவு செய்ய வேண்டும் என எடப்பாடி விளக்கினார். பா.ம.க. தரப்பில் தொகுதிக்கு 50 சி பேசப்பட்டது.

""சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு சீட் இல்லை. அதில் எங்கள் வாக்குவங்கியை அ.தி.மு.க. பயன்படுத்தி வெற்றி பெறுகிறது. எனவே கூடுதல் தொகை வேண்டும்'' என பா.ம.க. தரப் பில் கேட்கப்பட்டது. பா.ம.க.வைப் போலவே தே.மு.தி.க.விடம் பேசப்பட்டது. அவர்கள் மதுரை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளைச் சொன்னார்கள். அவர்களுக்கு மூன்று சீட் + தேர்தல் செலவு என முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் கிருஷ்ணகிரியில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். கரூரில் பாராளுமன்ற துணை சபாநாய கரான தம்பிதுரை போட்டியிடுகிறார். திருவள்ளூரில் அ.தி.மு.க. மக்களவைத் தலைவர் வேணுகோபால், தென் சென்னையில் மைத்ரேயன் அல்லது அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் களமிறங்குவார்கள். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

திருப்பூரிலும் கோவையிலும் அ.தி.மு.க. போட்டியிட ஆர்வமாக உள்ளது. பொள்ளாச்சியை வேண்டுமானால் பா.ஜ.க. எடுத்துக்கொள்ளட்டும். அதேபோல் திருச்சியை யும் தரமுடியாது என லிஸ்ட் படிக்கப்பட்டது. எனினும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்யாததால் பியூஸ் கோயல் புறப்பட்டுச் சென்றார். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைந்தால் வேலூர் சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் உட்பட தமிழகத்தின் பல உணர்வுப்பூர்வ விவகாரங்களில் புதிய அறிவிப்புகளை மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் மோடி அறிவிக்கவுள்ளார் என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

இன்றைய அ.தி.மு.க., எடப்பாடி தலைமையிலான கொங்கு வேளாளர் அ.தி.மு.க., தினகரன் தலைமையி லான முக்குலத்தோர் அ.ம.மு.க. என பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாத பா.ஜ.க. உட்பட கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க. வாக்கு கள் அ.ம.மு.க.வுக்குப் போகலாம் என கவலைப்படுகிறார் கள் அ.தி.மு.க.வினர். அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அமித்ஷாவின் தமிழக வருகையால் பரபரப்பாகியுள்ளது அ.தி.மு.க.-பா.ஜ.க. முகாம்.



ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT