Skip to main content

மத்திய பாஜக ஆட்சிக்கு ‘ஜால்ரா’: ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி: மு.க.ஸ்டாலின்

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
Stalin



“மத்திய பாஜக ஆட்சிக்கு ‘ஜால்ரா’ போடும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது ‘ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி’” என கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  
 

2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஒரு கானல் நீராக அமைந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து எந்தவொரு திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கவில்லை. குறிப்பாக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோருடைய முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, 3.5 லட்சம் கோடி கடன் என்று தொடரும் மாநிலத்தின் நிதி நிலைமை, மிகவும் ஸ்தம்பித்துப் போயிருப்பது இந்த பட்ஜெட்டின் மூலம் தெளிவாக தெரியவருகிறது. 
 

அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மையை பொறுத்தவரையில், மிகுந்த மோசமான நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டியால் 9,000 கோடி ரூபாய் இழப்பு வருமென்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அன்றைக்கே எடுத்துச் சொன்னார். இன்றைக்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், ஜிஎஸ்டியால் பயன் விளைந்திருக்கிறது, லாபம் வந்திருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து, மத்தியில் இருக்கின்ற பிஜேபி ஆட்சிக்கு ’ஜால்ரா’ போடும் ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த பட்ஜெட் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற பட்ஜெட் பற்றி ஒரே ஒரு வரியில் சொல்வதென்றால், ‘ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி’. 
 

செய்தியாளர்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறாரே? 
 

ஸ்டாலின்: ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் 2ஜி வழக்கில் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கிலும், அவர்கள் தவறு செய்யவில்லை, நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு இருப்பது, உள்ளபடியே வரவேற்கத்தக்கது. திமுகழகத்தின் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட களங்கங்கள் எல்லாம், இல்லை என தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதை கண்கூடாக இன்றைக்கு நாம் பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.