ADVERTISEMENT

எய்ட்ஸ் பரப்பும் அரசு மருத்துவமனைகள்! -சாத்தூரில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை!

10:24 AM Dec 26, 2018 | cnramki

‘நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்பவராக இருந்தாலும், எச்.ஐ.வி. தொற்று குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 80 சதவீத எய்ட்ஸுக்குக் காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவு என்பதும் எச்.ஐ.வி. உள்ள ரத்தம் மூலமாக எளிதில் பரவும் என்பதும், எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வாயிலாகப் பலரும் அறிந்திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், எய்ட்ஸுக்காக பல்லாயிரம் கோடிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் செலவழிக்கின்ற நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளே சத்தமில்லாமல் எய்ட்ஸ் பரப்பும் பணியைச் செய்துவருவதுதான். இதில் மிகைப்படுத்துதல் எதுவும் இல்லை. இதுபோன்ற தவறுகளுக்கு எடுத்துக்காட்டாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள் உள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT


சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அடிக்கடி சிவகாசி அரசு மருத்துவமனை சென்று, ரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெளிநாடு செல்வதற்காக, இவர் மதுரையில் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, தனக்கு எச்.ஐ.வி. பாசிடிவ் இருப்பதை அறிந்து அதிர்ந்துபோனார். உடனே, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, தன் ரத்த விபரத்தைக் கூறினார்.


சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கப்பாண்டியின் மனைவி பரமேஸ்வரி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். எட்டு மாத கர்ப்பினியான இவரைப் பரிசோதனை செய்த சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ரத்தக்குறைவு இருப்பதால் உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றனர். உடனே, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து ரத்தம் பெறப்பட்டு, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பரமேஸ்வரியின் உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. சில நாட்களிலேயே, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட, உடல்நலம் அவருக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீண்டும் இவரைப் பரிசோதித்தபோது, எச்.ஐ.வி. தொற்று இருப்பதை சாத்தூர் அரசு மருத்துவனை டாக்டர்கள் அறிந்தனர். உடனே, இதுகுறித்த தகவலை விருதுநகர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரனிடம் தெரிவித்தனர். பிறகு நடந்த விசாரணையில்தான், பரமேஸ்வரியின் உடலில் ஏற்றப்பட்டது, எச்.ஐ.வி. தொற்றுள்ள ரமேஷ் தானமாகக்கொடுத்த ரத்தம் என்பதைத் தெரிந்துகொண்டனர்.



விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர்கள் இருவர் மற்றும் நம்பிக்கை மைய ஆலோசகர் ஒருவர் என, மொத்தம் 3 பேரை பணியிடை நீக்கம் செய்த இணை இயக்குநர் மனோகரன், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், பரமேஸ்வரியின் கணவர் தங்கப்பாண்டி, அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.


பரமேஸ்வரியோ, “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். நடந்த எல்லாத் தவறுகளும் அரசு மருத்துவ அலுவலர் உட்பட பலருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை. ரத்த வங்கியிலேயே, எச்.ஐ.வி. பாசிடிவ் ரத்தத்தைச் சேமித்து வைக்கிறார்கள் என்றால், ரத்ததானம் செய்பவர்களின் ரத்தத்தைப் எந்தவிதத்தில் பரிசோதித்திருப்பார்கள்? அரசு மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.” என்று தலையில் அடித்துக்கொண்டார்.


பரமேஸ்வரியின் கணவர் தங்கப்பாண்டி “எனக்கு எந்த அரசு வேலையும் வேண்டாம். மூட்டை தூக்கி என் மனைவியைக் காப்பாற்றுவேன். சொந்த ஊரிலேயே என் மனைவி உயர் சிகிச்சை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார் வேதனையோடு.

கண்காணிப்பற்ற ரத்த வங்கிகளின் அலட்சியப்போக்கு!

எய்ட்ஸ் மருத்துவப்பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர், “எச்.ஐ.வி. என்ற கொடிய நோய் மனித உடலில் பரவியவுடன், முதலில் கண்டறியப்பட வேண்டியது பாலிமரேஸ் தொடர்வினை பரிசோதனை (Polymerase Chain Reaction – PCR) எனப்படும் உடற்காப்பு ஊக்கி (antigen) பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனை ஆரம்பக்கட்டத்திலேயே, ஒருவருக்கு எச்.ஐ.வி. உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதற்கான பிரத்யேக பரிசோதனை ஆகும். அதன்பின்னர், எச்.ஐ.வி. கிருமியானது உடல் முழுவதும் பரவிய பிறகு, இதனால் எதிர்ப்பு ரசாயணம் உண்டாகும். இந்த எதிர்ப்பு ரசாயணம், antibody என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பொருள் ஆகும். இந்த antibody பரிசோதனை மூன்று வகைப்படும். அவை, Rapid Test, Elisa மற்றும் Western Blot போன்ற பரிசோதனைகள் ஆகும். இந்த மூன்று வகைகளில், விரைவுப் பரிசோதனை (Rapid Test) என்பது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சாதாரணமாக மேற்கொள்ளக்கூடிய பரிசோதனை ஆகும்.

ரத்ததானம் செய்பவர்களுடைய ரத்தமானது, உடனடியாக Elisa பரிசோதனை எனப்படும், அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு இயந்திரத்தில் வைத்துச் செய்யப்படும் பரிசோதனை ஆகும். உதாரணத்துக்கு, 50 அல்லது 60 பேர் ரத்ததானம் செய்தால், அவர்களின் ரத்தத்தை Elisa பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். சாதாரணமாக, ஒவ்வொருவருக்கும் Rapid பரிசோதனை மேற்கொள்கிறார்கள். இந்த மூன்று வகை பரிசோதனைகளும், எச்.ஐ.வி. கிருமி ஒரு மனிதனின் உடலில் பாய்ந்து, எதிர்ப்பு ரசாயணம், அதாவது வேதியியல் மாற்றங்கள் அடைந்தபிறகு, கண்டறிந்து காட்டக்கூடியது. இந்தவிதத்தில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்வதில் ஒரு பலனும் இல்லை. ஆனால், இவருக்கு எச்.ஐ.வி. இருக்கிறது, நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பி.சி.ஆர். பரிசோதனை என்பது பிரத்யேக பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையை எந்த ஒரு அரசு மருத்துவமனையும் மேற்கொள்வதில்லை. இந்தப் பரிசோதனை முறையைக் கடைப்பிடித்தால், ரத்ததானம் பெறுபவர்களை, எச்.ஐ.வி. தொற்று பரவாமல் காத்திட முடியும்.


ரத்ததானம் என்ற பெயரில், ரத்தத்தைச் சேகரிக்கும் ரத்தச் சேமிப்பு வங்கிகளில் உள்ள ரத்தமானது, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே, ரத்தம் தேவைப்படுவோருக்கு செலுத்தப்படுகிறது. இதன்மூலம், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களும் எச்.ஐ.வி. நோயாளிகள் ஆகிவிடுகிறார்கள். ரத்தச் சேமிப்பு வங்கி என்பது, தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி என்ற அரசு சார்ந்த ஒரு சங்கம் ஆகும். இதை நடத்துவதற்கு, மாவட்ட மருந்துக்கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்திலிருந்து பிரத்யேக உரிமம் பெறவேண்டும். இந்த உரிமம் பெற்றபிறகுதான், ரத்தச் சேமிப்பு வங்கி நடத்த முடியும். இந்த ரத்தச் சேமிப்பு வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மருத்துவத்துறையில் யாரும் கண்காணிப்பதில்லை. ரத்தச் சேமிப்பு வங்கிகளை முறையாகக் கண்காணித்தால் போதும். சாத்தூரில் ஒரு கர்ப்பிணிக்கு நடந்ததுபோல், ரத்தம் தேவைப்படும் எந்த ஒரு மனிதருக்கும் எய்ட்ஸ் பரவாமல் இனி தடுக்க முடியும்.” என்று அரசு மருத்துவமனைகளின் நிலைப்பாட்டை வேதனையுடன் பகிர்ந்தார்.


‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா.. அங்கே ரெண்டு கொடுமை திங்குதிங்குன்னு ஆடுச்சாம்..’ ன்ற கிராமத்துச் சொலவடையை பிரதிபலிப்பதாக அல்லவா இருக்கின்றன அரசு மருத்துவமனைகளின் அலட்சிய செயல்பாடுகள்?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT