ADVERTISEMENT

தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்... கட்சியின் மூத்த தலைவரை விளாசிய தமிழக எம்.பி.

06:25 PM Dec 01, 2020 | rajavel

ADVERTISEMENT

வெளிப்படையான எதிரியை வெற்றிகொள்ளும் வலிமை இல்லை. உள்ளுக்குள்ளேயே உருவாகும் எதிரிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியவில்லை. இதுதான் காங்கிரசின் அகில இந்திய நிலை. கடும் நெருக்கடியில் இருக்கிறார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

ADVERTISEMENT

நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து தலைவரை தேர்வு செய்யுங்கள் என்பதை வலியுறுத்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த 2019-ல் விலகினார் ராகுல்காந்தி. அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டியும் தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்த பிறகும் தலைவர் பதவியை அவர் ஏற்கவில்லை. இன்னமும் நிரந்தரத் தலைவரின்றித் தவிக்கிறது காங்கிரஸ்.

நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இடைக்காலத் தலைவரான சோனியாவிடம் அளித்தும் அவர் இன்னும் தேர்வு செய்யாததால், தலைமைப் பொறுப்பு குறித்து பலவித கருத்துகளும் சர்ச்சைகளும் வெளிப்படுகின்றன.

பீஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த் திருந்தனர். ஆனால், கடுமையான தோல்வியை காங்கிரஸ் சந்திக்க, எதிர்மறை விமர்சனங்களை வைக்கத் துவங்கி யுள்ளனர் கட்சியின் மூத்த தலைவர்கள்.

ராஜ்யசபாவின் காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், ""தேர்தல் காலங்களில் காங்கிரசில் வேட்பாளர் தேர்வின்போது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் மக்களுக்கும் காங்கிரசுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. மக்கள் தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்து விட்டனர். பாஜகவிலும் இது விதிவிலக்கல்ல. இருப்பினும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூட பாஜக வேரூன்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் அப்படி இயங்கவில்லை'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதாவது, கட்சியின் மேலிடப் பார்வை யாளர்களாக அந்தந்த மாநிலங்களுக்கு செல்பவர்களை லோக்கல் பிரமுகர்கள் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து, சகல வசதிகளுடன் ஜிவ் ஏற்றி விடுகிறார்கள். அதில் மயங்கியும், லோக்கல் அரசியலில் ஒரு சார்பு நிலை எடுத்தும், மாநிலத்தில் கட்சி வளர்ச்சியைக் கண்டு கொள்ளாமல் விடுவ தால், வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டுவிடு வதால், காங்கிரசுக்கு தொடர்ந்து தோல்வி ஏற்படுகிறது என்பதுதான் குலாம்நபியின் குற்றச்சாட்டு. தமிழக காங்கிரசின் மேலிடப் பிரதிநிதி தொடர்பான இந்த ஃபைவ் ஸ்டார் கலாச்சாரம் பற்றி அண்மையில் ராங்-கால் பகுதியில் பதிவாகியிருந்தது.

குலாம் நபி ஆசாத் போன்ற மற்றொரு மூத்த தலைவரான கபில்சிபில், ""18 மாதங்களாக முழு நேரத் தலைவர் இல்லாத கட்சியால் பாஜகவுக்கு எதிராக வலிமையான கட்சியாக நாம் எப்படி இருக்க முடியும்'' எனக் கேள்வி எழுப்பி யிருக்கிறார். இதற்கு வலிமை சேர்ப்பது போல பேசியிருக்கும் ப.சிதம்பரம், ""குஜராத், உத்தரபிரதேசம், ம.பி. உள் ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு அடிப் படை கட்டமைப்பில் வலிமை இல்லை என்பதையும், கட்சி பலவீனமடைந்து வருவதையும் நமக்கு உணர்த்துகிறது'' என விமர்சித்திருக்கிறார்.

பீகாரின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், ‘""கட்சியின் தோல்விக்கு ஒருவகையில் குலாம்நபி ஆசாத்தும் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு தலைமை மட்டுமல்ல அனைவருமே காரணம்தான். தலைவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய தோல்வி வந்திருக்காது'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

ராகுலின் ஆதரவாளரும் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ""தலைமைக்கு எதிராக விமர்சிப்பவர்கள் தேர்தல் களத்திற்கே வராதவர்கள். இந்த சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டும் எழும்'' என்கிறார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி. மானிக்கம்தாகூரிடம் நாம் பேசியபோது, ’""குலாம் நபி விமர்சித்திருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் கலாச்சாரம் அவருக்கு தெரியாததல்ல. தமிழகத் துக்கு வரும் போதெல்லாம் அந்த கலாச்சாரத்தை அனுபவித்தவர்தான். குலாம்நபியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மோடி-அமித்சாவின் அதிகாரத்தை 2024-ல் காங்கிரஸ் துடைத்தெறியும். ராகுலின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழும். தலைமையை விமர்சிக்கும் குலாம்நபி போன்றவர்கள், கட்சி தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்'' என்கிறார் ஆவேசமாக.

குலாம்நபியின் விமர்சனத்திற்கு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என விசாரித்தபோது, ""வருகிற ஜனவரி மாதம் அவரது ராஜ்யசபா பதவி காலம் முடிவடைகிறது. மீண்டும் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை. 1982-களிலிருந்தே டெல்லியில் அரசின் ஆடம்பர பங்களாவில் இருந்தே பழக்கப்பட்டு விட்டார் ஆசாத். பிப்ரவரிக்கு பிறகு அரசு பங்களாவை காலி செய்வ வேண்டும். கட்சியிலும் இனி பெரிய பிடிப்பு அவருக்கு கிடைக்காது. அதனால் பாஜகவின் விருப்பத்திற்கேற்ப இப்படி விமர்சித்து வருகிறார்'' என்கின்றனர்.

இதற்கிடையே, பாஜகவின் வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் சோனியா உத்தரவிட்டி ருக்கும் நிலையில், தமிழகத்தில் இதனை வீரியமாக நடத்தி வருகிறார் கே.எஸ்.அழகிரி. பாஜகவின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக ஏர் கலப்பை பேரணி யை நடத்தி வரும் அழகிரி, வருகிற 28-ந்தேதி 71 தொகுதிகளில் இந்த பேரணியை நடத்த திட்டமிட் டிருக்கிறார். முக்கிய தலைநகரங்களில் இந்த பேரணியை துவக்கி வைக்கிறார்கள் காங்கிரஸ் தலை வர்கள். 234 தொகுதிகளிலும் இத்தகைய பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

டெல்லியில் காற்றில் மாசு அதிகரித்திருப்ப தால் கோவா அல்லது சென்னையில் தங்கியிருக்கச் சொல்லி சோனியாவுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள் அவரது குடும்ப மருத்துவர்கள். இதனைத் தொடர்ந்து மகன் ராகுல்காந்தியுடன் கோவாவுக் குப் பயணப்பட்டிருக்கிறார் சோனியா. இரு வாரங்கள் அங்கு தங்கியிருக்கும் சோனியா, கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து ராகுலிடம் விவாதித்து வருகிறார். மூத்த தலைவர்களையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் கட்சியின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசியல் செய்யும் சக்தி ராகுல் காந்தியைத் தவிர வேறு எந்த ஒரு தலைவருக்கும் இல்லை என்பதால் கட்சியின் முழு நேர தலைவராக ராகுலை ஏற்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சோனியா காந்தி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT