ADVERTISEMENT

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கே குழிவெட்டிய அமைச்சர்!

10:31 AM Apr 14, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் அதிமுக வேட்பாளருமான காமராஜ், தனது தொகுதியில் செல்வாக்காக இருந்தாலும், திருவாரூர் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் ஏனைய அதிமுக வேட்பாளர்களுக்கு, தலைமை கொடுத்த கரன்ஸியைக் கூடக் கொடுக்காமல் அவர்களைத் திண்டாடவிட்டது பற்றி, அதிமுக சைடில் ஏகப்பட்ட புலம்பல்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில், நன்னிலம் தவிர மற்ற மூன்று தொகுதிகளுமே திமுக வசமே இருந்துவருகிறது. மாவட்டத்தில் தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி வருகிறார் காமராஜ். அதே நிலைப்பாட்டையே இந்தமுறையும் வேட்பாளர் தேர்விலிருந்தே அவர் எடுத்தார். அவரது பரிந்துரையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களைக் கண்டு, கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டாலும், "மந்திரிதானே செய்யப்போறாரு. நமக்கென்ன?' என தங்களையே சமாதானம் செய்துகொண்டனர்.

அதேபோல் அவரை நம்பிக் களமிறங்கிய வேட்பாளர்கள், பிரச்சாரத்தை முடித்துவிட்டு, "வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் கொடுத்தால்தான் மேனேஜ் பண்ண முடியும்” என்றபடி, அமைச்சர் காமராஜிடம் செல்ல, "ஏங்கிட்ட ஏதுப்பா காசு? தலைமையும் நம்மளக் கண்டுக்கலை. நானும் கஷ்டத்தில் இருக்கேன்'' என்று கைவிரித்து, அவர்களை அவர் பரிதவிக்கவிட்டு விட்டாராம். இந்தச் செய்தி பரவ, அதிமுகவினர் கடும் கொந்தளிப்போடு அமைச்சரைக் கரித்துக்கொட்டி வருகின்றனர்.

"என்ன நடந்தது?'' என அதிமுக பிரமுகர் ஒருவரிடமே நாம் விசாரித்தபோது... “மாவட்டத்தில் எப்போதுமே தன்னை மிஞ்சி யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் காமராஜ் மிகவும் கண்ணும்கருத்துமாக இருப்பார். கடந்தகால தேர்தல்களில் தனக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளர்களையே எதிர்க்கட்சி மா.செ. மூலம் பலவீனமான வேட்பாளராகப் போட வைத்து வெற்றிபெற்றார். ஆனால் இந்தமுறை அவரை எதிர்த்து பலமான வேட்பாளரைத் திமுக களமிறக்கியிருக்கிறது. அதோடு திமுக தலைமையும் அந்தக் கட்சி மா.செ.வான பூண்டி கலைவாணனிடம் நன்னிலம் தொகுதியை சவாலாக ஏற்கும்படி சொல்லியிருக்கிறது. அதனால் திமுக தரப்பு கடுமையாக அமைச்சருக்கு எதிராகப் பிரசாரம் செய்து, கள வேலைகளையும் பார்த்திருக்கிறது. அதனால் திகைத்துப்போன காமராஜ், வழக்கமாக கரன்சியை மட்டுமே நம்பாமல், இந்தமுறை டூவீலரில் வீதி, வீதியாக மக்களிடம் சென்று ஓட்டுக்கேட்டுக் கெஞ்சிக் கூத்தாடினார். அதோடு அவரது மகன்கள், மனைவி, மைத்துனர் என குடும்பத்தினரும், உறவினர்களும் தொகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர், ஓட்டுக் கேட்டார்கள். அவரது உறவினர்களின் கெடுபிடியால் எங்கள் கட்சியினர் டென்ஷனாகிவிட்டார்கள். இவை எல்லாம் அவருக்கு மைனஸ்கள்'' என்றார் எரிச்சலாக.

இன்னொரு பிரமுகரோ, "மன்னார்குடி வேட்பாளராக அமமுகவில் இருந்து திரும்பி வந்த சிவராஜமாணிக்கத்தை வேட்பாளராக, அவர் பரிந்துரைத்ததால்... பல மூத்த நிர்வாகிகள் கொதிப்படைந்திருக்கிறார்கள். எவ்வளவு விசுவாசமா உழைத்தாலும் மந்திரி, எங்களை மனுசனா நினைக்கமாட்டார். அதேபோல திருத்துறைப்பூண்டி தொகுதியில், உண்மையான கட்சி விசுவாசிகளை விட்டுவிட்டு, பாரதி என்பவரின் கணவர் சுரேஷ்குமாரை வேட்பாளராக அறிவித்து, குட்டையைக் குழப்பிவிட்டார். வேட்பாளரின் மனைவி பாரதியும், மாமனாரும் இந்து சமய அறநிலையத்துறையில் கோடிக்கணக்கில் கையாடல் செய்து பலமுறை பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள்.

ஜெயலலிதாவால் மூன்றுமுறை நீக்கப்பட்டவர்தான் பாரதி, அவரது கணவருக்குப் பணம் உள்ளிட்ட அல்ப விசயங்களுக்காக சீட்டைக் கொடுத்து, கட்சியையே பலவீனமாக்கிவிட்டார். அவரைப் பொறுத்தவரை, அவருக்கு அடிமைபோல் இருப்பவர்கள் மட்டும் பொறுப்புகளில் இருந்தால் போதும். தகுதியும் செல்வாக்கும் செயல்திறனும் கொண்ட யாரும் வந்தால், தன் பவர் குறைந்துவிடுமோ என்றுதான், இப்படியெல்லாம் செய்கிறார். இப்போது தேர்தல் செலவுக்கான காசையும் பதுக்கிவிட்டார். அவர் இனி உருப்படவே மாட்டார்'' என்றார் ஆவேசமாக.

மந்திரிக்கு எதிரான அலை, கட்சியினர் மத்தியில் பரவலாகவே இருக்கிறது.

அதேபோல திருவாரூர் தொகுதியில் வெள்ளாளர் சமூகத்தவரான ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை பலிகொடுக்க வேட்பாளராக அறிவித்தார்.

"‘என்னிடம் செலவு செய்யும் அளவிற்கு பணம் இல்லை, 2016 தேர்தலில் போட்டியிட்டபோதே நான்குகோடி வரை கடனாளியாக ஆகிவிட்டேன், அதனால எனக்கு சீட் வேணாம், வேற யாருக்காவது கொடுங்க' என மறுத்துவிட்டார். ‘நான் பார்த்துக்குறேன், பிரச்சாரத்தைக் கவனிங்க' என கூறியதால், துணிந்து இறங்கினார் பன்னீர்செல்வம். ஆனால் கடைசி நேரத்தில் கைவிரித்து அவரைப் பிரச்சாரத்திற்குச் செல்லவிடாமல் முடக்கிப்போட்டுவிட்டார்'' என்று ஆதங்கப்படுகிறார்கள் ர.ர.க்கள்.

உண்மைதானா என்று திருவாரூர் அதிமுக பிரமுகர் ஒருவரிடமே விசாரித்தோம்... "தேர்தல் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய அமைச்சர் காமராஜை சந்தித்தோம். அவரோ எடுத்த எடுப்பிலேயே ‘பணமெல்லாம் என்கிட்ட இல்ல, என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நானே டாக்குமெண்ட்ட அடமானம் வச்சுதான் கடன் வாங்கியிருக்கேன். இதுல எப்படி உங்களுக்கு நான் கொடுக்க முடியும். பூத் செலவுக்கு 50 லட்சம் தர்ரேன்' என காமராஜ் கூற... இதைக் கேள்விப்பட்ட பன்னீர்செல்வம், தனது மகனிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார், அவரது மகனோ கடுமையான கோபமடைந்து, ‘பணமெல்லாம் வேணாம் வந்துடுங்க' என கூறியிருக்கிறார்.

ஆனாலும் அவசரப்படாத பன்னீர்செல்வமும், சில நிர்வாகிகளும் "திமுக ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்போறாங்க, நாம 500 ரூபாயாவது கொடுத்தாகணும், இல்லன்னா டெபாசிட்கூட வாங்க முடியாது, நீங்க சொல்லித்தான் நான் போட்டியிட்டேன். எனக்கு இருக்கிற இமேஜும் போய்விடும், தயவுசெய்து கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்க' என்று கெஞ்சியிருக்கிறார். கொஞ்சமும் இரக்கமில்லாமல், ‘என்னிடம் சுத்தமா பணமில்ல, கடனாக 2 கோடி பணம் வாங்கித் தரேன், டாகுமெண்ட் இருந்தா கொடுங்க, நீங்க கேட்குற பணத்த வாங்கித்தர்றேன்’ என்று கூறியிருக்கிறார். ‘டாகுமெண்ட் எல்லாமே லோன்ல இருக்குங்க, மேல வாங்க முடியாதுங்க' என்று ஏ.என்.ஆர். கூற... ‘அதான் சன்னாநல்லூர்ல ஒரு காம்ப்ளக்ஸ் வாங்கியிருக்கீங்களே, அந்த டாகுமெண்ட்ட எடுத்து வாங்க' என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

ரொம்பவே அப்செட்டான ஏ.என்.ஆர். வீட்டுக்கு வந்து ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு முடங்கியிருக்கிறார். இந்தச் செய்தி கட்சிக்காரர்களுக்கும் அவரது சமூகத்தவர்களுக்கும் தெரியவர, கோபத்தின் உச்சத்திற்கே சென்ற கட்சிக்காரர்கள், ‘மேலிடத்தில் சொல்லுவோம்' என கூறியிருக்கின்றனர், ‘வேணாம்பா, அந்த ஆளுதான் துரோகம் செய்யுறாருன்னா... நாமளுமா செய்யணும்'னு மறுத்துவிட்டார்,

இதற்கிடையில் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வெள்ளாளர் சமூகத்தவர், நன்னிலம் தொகுதியில் உள்ள உறவுக்காரர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லியிருக்கின்றனர். ‘காமராஜுக்கு இதோடு நன்னிலம் தொகுதியில் முடிவு கட்டணும்' என ஒன்றுகூடி அவர்களுக்குள் முடி வெடுத்துள்ளனர். இந்த செய்தி அறிந்த காமராஜ், ஏ.என்.ஆர். பன்னீரைத் தேடி வீட்டிற்கே சென்றிருக்கிறார்'' என்கிறார் விவரமாக.

"தேர்தலுக்காக கட்சி ஒதுக்கிய பணம் என்னாச்சி? மணல், அரிசி, பருப்பு, கடத்தல்ல சம்பாதிச்ச பணமெல்லாம் என்னாச்சி? யாருகிட்ட விடுறாரு ரீலு'' என திருவாரூர் நகர அதிமுகவினர் கொதிப்பாகியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT