Skip to main content

420 கோடி மோசடி... சிக்கிய மந்திரி நண்பர்... பயத்தில் அதிமுக அமைச்சர்!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

மத்திய அரசின் ஏஜென்சி ஒன்று, வெளிமாநில தலைமையகத்திலிருந்து வந்து மாநில அமைச்சருக்கு நெருக்கமான ஒருவரை கைது செய்து வெளிமாநில சிறையிலடைத் திருக்கிறது. அன்னை இன்ப்ரா என்பது கம்பெனியின் பெயர். இந்த கம்பெனி ஆந்திராவிலும் தமிழகத்திலும் சாலைகள் போடுவது, அணைகள் கட்டுவது போன்ற வேலைகளை செய்து வருகிறது. பொதுவாக இந்தப் பணிகளில் ஊழல் அதிகம். அதனால் கணக்கு காண்பிப்பதற்காக போலி பில் போடுவது சகஜம். நூறு ரூபாய் செலவு செய்துவிட்டு முன்னூறு ரூபாய்க்கு கணக்கெழுதுவார்கள்.

 

admk



அப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏகப்பட்ட வேலைகளை எடுத்து செய்த அன்னை இன்ப்ரா கம்பெனி தனது பில்களை சமர்ப்பித்திருந்தது. ஆந்திராவிலேயே வாங்கப்பட்டிருந்த பொருட்கள் எதற்கும் ஜி.எஸ்.டி. கட்டப்படவில்லை. அத்துடன் ஜி.எஸ்.டி. வரி கட்டப்பட்டது போன்று போலி பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த சரக்கு மற்றும் சேவை வரிகள் வாரியத்தின் புலனாய்வுப் பிரிவின் விசாகப்பட்டின கோட்ட அதிகாரிகள், ஆந்திரா முழுவதும் உள்ள அரசு துறைகளில் அன்னை இன்ப்ரா நிறுவனம் கொடுத்த பில்களை கைப்பற்றி சோதனை நடத்தினார்கள். அதில் வெவ்வேறு பினாமி பெயர்களில் ஜி.எஸ்.டி. கணக்குகளை தொடங்கி செலவு செய்யாமலே கணக்கு காட்டி, "எங்கள் கம்பெனி அதிக மூலதனத்தை முதலீடு செய்கிறது' என்பது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 

admk



இப்படி சுமார் 450 கோடி ரூபாய் பொருட்களை பல்வேறு போலி ஜி.எஸ்.டி. கணக்குகள் மூலம் வழங்கியதாக கணக்கு காட்டியதோடு, இந்த 450 கோடி ரூபாய் செலவுகளுக்காக 60 கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்றுள்ளது. அத்துடன் அன்னை இன்ப்ராவை போன்றே ஆந்திராவிலும் தமிழகத்திலும் காண்ட்ராக்ட் எடுத்துள்ள கம்பெனிகளுக்கும் இந்த போலி பில்களை அளித்துள்ளது. இதையொட்டி அன்னை இன்ப்ராவின் உரிமையாளர் அசோக்குமார் என்பவரை கைது செய்து விசாகப்பட்டினத்தில் சிறை வைத்துள்ளது.


இது ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் நடக்கவில்லை. ஹரியானா மாநிலம் சிர்சாவில் 90 கம்பெனிகள் இணைந்து 7600 கோடி ஜி.எஸ்.டி. கட்டாமல் ஏமாற்றியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் வெறும் வெற்று லெட்டர்பேட் கம்பெனிகள். வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கும் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. கட்டியது போன்ற போலி பில்களை இந்த 90 கம்பெனிகளும் தயாரித்துள்ளன. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து அவரது வீட்டில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மொத்தம் 173 வங்கிக் கணக்குகள், அந்த வங்கிகளுடன் தொடர்புடைய 110 கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டன என்கிறது ஜி.எஸ்.டி. வரி வசூல் வட்டாரம்.

அன்னை இன்ப்ரா நிறுவனம் தமிழகத்தில் சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் நான்கு மாடி அளவில் ஒரு புதிய அலுவலகத்தை கட்டிய நிறுவனம். சமீபத்தில் வருமான வரித்துறையால் ரெய்டுக்குள்ளான காண்ட்ராக்டர் செய்யாதுரையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பாலங்கள், சாலைகள் என பலவற்றை கட்டிய நிறுவனம். இந்த நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 470 கோடி ரூபாய் போலி பில் கொடுத்து ஜி.எஸ்.டி. கட்டாமல் மோசடி செய்துள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இந்த நிறுவனம் போலிகளுக்கு பெயர் பெற்றது. தமிழகத்தில் இந்த நிறுவனத்தை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். காரணம் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக மிக நெருக்கமான நிறுவனம் இது. ஈரோடு மாவட்டத்தில் செங்கோட் டையன் ஆதரவில் எம்.எல்.ஏ.வானவர் வி.பி.பெரியசாமி. அவரது தம்பி அருணாசலம் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர். அவரது அக்காள் மகன்தான் இந்த அசோக்குமார். இவர் சமீபத்தில் ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி செங்கோட்டையனுக்கு பரிசளித்தார். அந்த காரில்தான் செங்கோட்டையன் வலம் வருகிறார் என்கிறார்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆந்திர விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்னை இன்ப்ரா நிறுவனம் மேற்கொண்ட பணிகளை புலன் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக ஜி.எஸ்.டி. வரிகளின் புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது. இது தமிழகத்தில் அரசுப் பணிகளை அன்னை இன்ப்ரா பாணியில் மேற்கொண்ட காண்ட்ராக்டர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பலநூறு கோடி ரூபாய்கள் போலி பில்களை கொடுத்து கணக்கெழுதிய காண்ட்ராக்டர்களும் அரசு அதிகாரிகளும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அமைச்சர் வரை பயம் ஏற்பட்டுள்ளது.
 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.