ADVERTISEMENT

YES BANK ஆரம்பிக்க காரணமான நடிகர்... திவாலாக இது தான் காரணமா? திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்ட பாஜக அரசு! 

11:20 AM Mar 12, 2020 | Anonymous (not verified)

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த "யெஸ்' வங்கியின் நிறுவனர் ராணாகபூரை சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அதிரடியாக கைது செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறது.

நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், மோசடிகள், வாராக்கடன்கள் என கடுமையான சிக்கல்களில் பல மாதங்களாக தவித்து வந்தது யெஸ் பேங்க். கடந்த வருடம் இதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்ததாஸ், யெஸ் பேங்கினை நிர்வகிக்க ஒரு குழுவை நியமித்தார். அக்குழு நடத்திய ஆய்வில் பல வில்லங்கங்கள் அம்பலமானது.

ADVERTISEMENT



இதனையடுத்து ராணாவின் மீது சி.பி.ஐ.யிடமும் அமலாக்கத் துறையிடமும் புகார் அளித்தது ரிசர்வ் வங்கி. புகாரின் அடிப்படையில் ராணாகபூரின் பங்களாக்கள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான பல ஆவணங்களை கண்டெடுத்துள்ளனர். குறிப்பாக, ராணாவின் மனைவி பிந்து கபூரும், ரோஸ்னி உள்ளிட்ட ராணாவின் மகள்கள் மூன்று பேரும் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை மறைமுகமாக இயக்கி வந்திருப்பதற்கான டாகுமெண்டுகளை கைப்பற்றியுள்ளனர். அவற்றை சோதனைக்குட்படுத்தியபோது அவை அனைத்தும் போலி நிறுவனங்கள் என தெரிய வந்தன.

ADVERTISEMENT



இந்த போலி நிறுவனங்கள் மூலம் 2200 கோடி ரூபாய் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்திருக்கிறது. மேலும், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு 3,700 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார் ராணாகபூர். சம்பந்தப்பட்ட நிறுவனம், பிந்துகபூர் மூலமாகவே ராணாவை அணுகியுள்ளது. 3,700 கோடி கடன் கொடுத்ததற்காக ராணாகபூருக்கு 600 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது ஃபைனான்ஸ் நிறுவனம். இது தவிர, ஐ.எல்.எஃப்.எஸ்., அனில் அம்பானி குரூப், ரேடியஸ் டெவலப்பர்ஸ், எஸ்ஸார் பவர், காக்ஸ் அண்ட் கிங்ஸ் சி.ஜி.பவர், வர்தராஜ் சிமெண்ட்ஸ், கஃபே காஃபி டே, மண்ட்ரி குரூப், எஸ்ஸெல் குரூப் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சுமார் 10,200 கோடி ரூபாய்களை கடனாக வாரிக் கொடுத்துள்ளார் ராணா. இதில் பல நிறுவனங்கள் திவால் கண்டிசனில் இருந்தன. அதனை தெரிந்தே கடன் கொடுத்துள்ளார் ராணாகபூர்.



அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 2004 ஆட்சியின் போது ராணாகபூர் மற்றும் அசோக்கபூர் ஆகிய இரண்டு மும்பை தொழில் முனைவர்களால் சுமார் 150 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்டது யெஸ் வங்கி. இந்த வங்கி துவங்குவதற்கு உச்ச நடிகரின் நெருங்கிய உறவினரின் பங்களிப்பும் இருந்தது. அதனாலேயே இதன் நிறுவன தலைவர்களில் ஒருவர் என அவரை வங்கிகள் உலகம் கொண்டாடிய காலமும் உண்டு.


உச்ச நடிகரும் அவர் மூலம் பல தொழிலதிபர்களும் யெஸ் வங்கியில் பல கோடி ரூபாய்கள் டெபாசிட் செய்திருந்தனர். இதனுடைய அசுர வளர்ச்சியால் இந்த வங்கியின் ஒரு பங்கு 385 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. ஆனால், நிர்வாகத்தில் மோசடிகளும் ஊழல்களும் அதிகரித்ததால் அதன் கடன் சுமை 14,700 கோடியாக அதிகரித்தது. இதனால் கடந்த சில வருடங்களாகவே கடுமையான நட்டத்தில் இயங்குவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட உச்ச நடிகர் உள்பட பெரும் முதலைகள் பலரும் தங்களின் முதலீடுகளை திரும்பப்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.


வங்கியில் நடந்துள்ள நிர்வாக சீர்கேடுகளுக்கு ரிசர்வ் பேங்கும் ஒரு வகையில் காரணம். தற்போது வங்கி திவால் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவசரம் அவசரமாக தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட ரிசர்வ் வங்கி, வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பணத்தை எடுக்க கட்டுப்பாடு விதிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.யிடமும், ஸ்டேட் பேங்க் கிடமும் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க வலியுறுத்தியுள்ளது. இது ஒரு வகையில் ஆபத்தாகவும் மாறலாம்'' என்கிறார்கள்.



பாரத ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, "யெஸ் வங்கியின் மூலதனத்தை திரட்டுவதில் வங்கியின் தலைமை தவறிவிட்டது. அதன் விளைவை உணர்ந்து வங்கியின் இயக்குநர்கள் குழுவை தடை செய்ததுடன் வங்கியை முழுமையாக எடுத்துக் கொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்ததாஸ், மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவுபடியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ராணாவின் சொத்துக்களையும், வாராக் கடன்களில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரிசர்வ் வங்கி'' என்கிறார்கள்.

கடந்த ஆண்டு இதே நாளில் யெஸ் வங்கியின் ஒரு பங்கின் விலை 232 ரூபாய்க்கு சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மும்பை பங்கு சந்தையில் 16 ரூபாய் 20 காசுக்கும், தேசிய பங்கு சந்தையில் 16 ரூபாய் 60 காசுக்கும் என வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இது மேலும் சரியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

நரேந்திரமோடி பிரதமரானதற்கு பிறகு, பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்விக் கழகம், கடந்த 2017-ல் இந்திய வங்கி களின் நிலை குறித்த ஆய்வுகளை நடத்தியது. அதன் அறிக்கையில், பொதுத்துறை வங்கிகளின் பணப்பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மேலாண்மை கல்விக் கழகத் தோடு தொடர் புடைய பொருளா தார நிபுணர்களி டம் விசாரித்த போது, ""பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்துள்ள 11 ஆயி ரம் கோடி ஊழல்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியி லிருந்து மீளாத இந்திய பொருளாதாரம், மோடியின் ஆட்சியில் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம்தான். கடந்த 2014-ல் பொதுத்துறை வங்கிகளில் இருந்த வைப்புத் தொகையில் 700 கோடிக்கு மோசடிகள் நடந்தன. இது தொடர்பாக 9 வழக்குகள் மும்பை யில் பதிவானது. அதன் முடிவுகள் இன்னமும் வரவில்லை.

இதே ஆண்டில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் போலி ஆவணங்கள் மூலம் 1400 கோடி கடன் வாங்கிய கொல்கத்தா தொழிலதிபர் பிபின் வேக்ரா, தலைமறைவானார். அதேபோல, சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜெயின், லஞ்சத்திற்காக 8 ஆயிரம் கோடி கடன் கொடுத்து விசாரணை எதிர்கொண்டார்.

2015-ல் வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகளிலிருந்து சுமார் 6000 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. 2016-ல் சிண்டிகேட் வங்கியில் 300-க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் துவக்கப்பட்டு 1000 கோடி ரூபாயை வங்கி ஊழியர்களின் துணையோடு சுருட்டியது ஒரு கும்பல்.

பஞ்சாப் நேசனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் 2016-ல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார் விஜய்மல்லையா. அதன்பிறகு 11,300 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட நீரவ் மோடி.. வங்கி மோசடிகளுக்கு காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. அரசு என்றெல்லாம் வேறுபாடில்லை. ஆனால், மோசடி கள் பல்கிப் பெருகி யது கடந்த 6 வரு டங்களில்தான்.

இது குறித்து பல வழக்குகளை சி.பி.ஐ. போட்டிருந்தாலும் அவை வெறும் கண் துடைப்பாகவே இருப்பதால் வங்கிக் குற்றங்கள் குறையவில்லை. இந்திய வங்கிகளில் உயர்பொறுப்பு களில் தொடங்கி ஊழியர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரே வங்கியில் இருப்பதுதான் முறைகேடுகளுக்கு முதல் காரணம். ஒவ்வொரு காலாண்டுக்கும் வாராக் கடன்களை வங்கிகள் வெளியிடும்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தணிக்கைத்துறையும் நிதியமைச்சகமும் அதனை கண்டுகொள்வதில்லை.

2014-க்கு பிறகு வங்கி மோசடிகள் 4 மடங்கு அதிகரித்திருப்பதை ரிசர்வ் பேங்கே அறிவிக்கிறது. 2014-15 நிதியாண்டில் 19,455 கோடியாக இருந்த வங்கி மோசடிகள் கடந்த 2018- 19 நிதியாண்டில் வங்கி மோசடிகளின் தொகை மட்டும் 95,760 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதனை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுத்ததாக தெரியவில்லை. இதனால், இந்திய பொருளாதாரம் திணறிக்கொண்டிருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் திட்டமிட்டே திவாலாவதால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க முடியாமலும் மீட்க வழி தெரியாமலும் தடுமாறிக்கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களின் பணத்துக்கு ஆபத்தில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரத்துச் சொன்னாலும் வங்கிகள் மீது நம்பிக்கையை இழக்கத்துவங்கியிருக்கிறது சாதாரண பொதுஜனம். அடுத்தடுத்து பல வங்கிகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளன. அதில், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் கூட இருக்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT