ADVERTISEMENT

புராதன சின்னங்களில் அரசு கட்டுமானங்களுக்கு தடையா?  -நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி

11:40 AM Mar 17, 2020 | rajavel

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநில மக்களவை உறுப்பினரும் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, மத்திய தொல்லியல் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அளித்த பதில் திருப்தியில்லாததால், திமுக மக்களவை குழு துணைத் தலைவரான கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

அப்போது, ‘’சுப்ரியா சுலே அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ’மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்க மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது ‘ என கூறினார். ஆனால், மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை என்பதே உண்மை!



தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணிகளுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்க முடியாத நிலையே இருக்கிறது. தொல்பொருள்துறை தடைகளை ஏற்படுத்தியிருக்கிறதா? இதுகுறித்து அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டுகிறேன்” என்றார் கனிமொழி எம்.பி.

கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல், “மத்திய தொல்பொருள் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதன் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அந்த விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் வேறு பணிகளை செய்ய மாநில அரசுகளின் துறைகளுக்கு நாங்கள் பல முறை அனுமதிக்கவில்லை. அதேசமயம், மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய தேவை இருந்தால், அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

இதில் எந்த சிக்கலும் இருக்காது. நாட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில் கூட விதிமுறைகளின் படியேதான் மத்திய தொல்பொருள்துறை செயல்படுகிறது. மாநில அரசுகளுக்கு இதுபற்றி ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரலாம். தொல்பொருள்துறை எந்த தடையையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்கிறேன்” என்று விளக்கமளித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT