ADVERTISEMENT

விக்டோரியா மகாராணி காலத்து காசை கண்டெடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்! 

01:15 PM Mar 30, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் இருவர் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால காசுகளை கண்டெடுத்துள்ளனர்.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.

இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கூறியதாவது; 9-ம் வகுப்பு மாணவன் த.பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவன் மு.ஐயப்பன் ஆகியோர் ஆங்கிலேயர் கால வட்ட வடிவ 4 காசுகளை கீழவலசை சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்புக் காசுகள் 1 வெண்கலத்தால் ஆனது. மாணவன் பிரவின் ராஜ் கீழவலசையில் கண்டெடுத்ததில் ஒன்று கி.பி.1833-ல் வெளியிடப்பட்டது. இக்காசின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரையும் மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும் அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.

மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது. அரசியாய் இருந்த விக்டோரியா, பேரரசியாக கி.பி.1876-ல் பிரகடனப்படுத்தினார். இதனால் கி.பி.1877க்குப் பின் வந்த காசுகளில் அவர் எம்பரஸ் (பேரரசி) எனக் குறிப்பிடப்படுகிறார்.

மாணவன் ஐயப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த இரண்டு காசுகளில், ஒன்று கி.பி.1835-ல் வெளியிடப்பட்ட சிறிய காசு ஆகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் 1/12 அணா எனவும் மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது. மற்றொன்று ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப்பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம் ஆறாம் ஜார்ஜ் எம்பரர் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.

திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். ஐயப்பன் கண்டெடுத்த காசுகள் இவ்வாறு விட்டவையாக இருக்கலாம். ஆனால் பிரவின்ராஜ் கண்டெடுத்தவை மக்களின் சேமிப்பில் இருந்ததாக உள்ளது. திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் கீழே கிடந்த பாண்டியர், சோழர், டச்சுக்காரர் காசுகளை ஏற்கனவே கண்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT