ADVERTISEMENT

அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில்  ’கொலை காரர்கள்’ மாநாடு!  –பேரதிர்ச்சி ரிப்போர்ட்! (EXCLUSIVE)

08:00 PM Dec 05, 2018 | manosoundar

பிரபல ரவுடிகள் எல்லாம் ஒன்றுகூடி ‘கேக்’ வெட்டி கொண்டாடி தலைநகரத்தையே அதிரவைத்ததுபோல… தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலிருந்தும் ‘போலி மருத்துவர்கள்’ அதுவும்… அமைச்சர், எம்.பி., தலைமையில் கூடி மாநாடு நடத்தவிருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.

ADVERTISEMENT


நாளை (6-12- 2018) காலை 9 மணிக்கு சென்னை தி.நகர் ஆர்.கே. சாலை, அலமேலு மங்கா திருமணமண்டபத்தில் மாநாட்டிற்கு தலைமைதாங்கி ‘போலி டாக்டர்களை’ ஒருங்கிணைக்கும் கே.எஸ். சுப்பையா மற்றும் அவரது மனைவி எஸ். தமிழரசி இருவருமே போலி டாக்டர்கள்தான் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT


“15 ஆண்டுகளில் 19,000 கருக்கொலைகளை செய்திருக்கிறார்” என்று திருவாண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒரேயொரு போலி டாக்டர் ஆனந்தி என்பவர் குறித்தே சமீபத்தில் அதிர்ந்துபோய் சொல்லிக்கொண்டிருக்க… பல்லாயிரக்கணக்கான போலி டாக்டர்கள் எத்தனை ஆயிரம் உயிர்களை குடித்திருப்பார்கள்? என்ற பேரதிர்ச்சியுடன் நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது பகீரிட வைக்கும் பின்னணி தகவல்கள் கிடைத்தன.

  • எம்.பி.பி.எஸ்.(Bachelor of Medicine and Bachelor of Surgery) எனப்படும் அலோபதி மருத்துவம்,
  • சித்தா (Bachelor of Siddha Medicine & Surgery)
  • ஆயுர்வேதா (Bachelor of Ayurvedic Medicine and Surgery)
  • யுனானி (Bachelor in Unani Medicine and Surgery)
  • ஹோமியோபதி (Bachelor of Homeopathic Medicine and Surgery)
  • நேச்சுரோபதி அண்ட் யோகா (Bachelor of Naturopathy and Yogic Sciences)

ஆகிய இந்திய மருத்துவம் படிக்காமலேயே படித்ததுபோல் பட்டங்களைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிப்பவர்கள் போலி மருத்துவர்கள். இதில், இந்திய மருத்துவப்படிப்புகளை படித்துவிட்டு தொடர்ந்து அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் குற்றம்.




பட்டப்படிப்பு படிக்காத சித்தா- ஆயுர்வேதா- யுனானி பரம்பரை வைத்தியர்களுக்கு தொடக்கத்தில் ஆர்.ஐ.எம்.பி. (Registered Indian Medical Practitioner) எனப்படும் பதிவுச்சான்றிதழும், ஹோமியோபதி பரம்பரை வைத்தியர்களுக்கு ஆர்.ஹெச்.எம்.பி. (Registered Homeopathy Medical Practitioner) என்ற பதிவுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. தற்போது, பரம்பரை மருத்துவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும்போது ஆர்.ஐ.எம்.பி. என்ற சான்றிதழில் சித்தா பரம்பரை மருத்துவர் என்றால் ஆர்.எஸ்.எம்.பி. என்றும், ஆயுர்வேதா பரம்பரை மருத்துவர் என்றால் ஆர்.ஏ.எம்.பி. என்றும், யுனானி பரம்பரை மருத்துவர் என்றால் ஆர்.யூ.எம்.பி. என்றும் கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டுகொண்டிருக்கிறது. அதாவது, இண்டியன் என்பதற்கு பதிலாக அந்தந்த மருத்துவத்தின் முதல் எழுத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள். 1993ம் ஆண்டுக்கு பிறகு பரம்பரை சித்த வைத்தியர்களுக்கான புதிய பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகடமி தலைவரும் போலி டாக்டர்கள் மாநாடு ஒருங்கிணைப்பாளருமான கே.எஸ். சுப்பையா பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதா (Bachelor of Ayurvedic Medicine and Surgery) ஐந்தாண்டு பட்ட படிக்காமலேயே தனது பெயருக்கு பக்கத்தில் பி. ஏ.எம்.எஸ். என போட்டுக்கொள்கிறார். இது சட்டப்படி குற்றம்.




இதைவிடக்கொடுமை, இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு வரும் 99 சதவீத போலி டாக்டர்களை வரவேற்பவரும் கே.எஸ்.சுப்பையாவின் மனைவி எஸ். தமிழரசி வேறு யாருமல்ல. டாக்டர் என்றும் அதிமுக திருச்சி மாவட்ட மளிரணி செயலாளர் என்று அழைப்பிதழில் போட்டுக்கொள்ளும் இவரும் மருத்துவரும் அல்ல; தற்போதைக்கு மகளிரணி செயலாளரும் அல்ல. அதிமுக கழக செயற்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான எஸ். தமிழரசி கடந்த, சட்டமன்றத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, போலி டாக்டர் என்ற செய்தி நக்கீரனில் வெளியாகி, அப்புகாரால் அதிரடியாக மாற்றப்பட்டவர்.


அழகு நிலையம் நடத்திக்கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து தன்னை டாக்டர் என்று பெயருக்கு பக்கத்தில் போட்டுக்கொள்வதோடு தன்னைப் போன்ற போலி டாக்டர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தும் அளவுக்கு ஆளுங்கட்சி செல்வாக்கால் வளர்ந்துவிட்டார்.


இந்நிகழ்ச்சியில், ‘இயற்கை மருத்துவம் பற்றிய விளக்கவுரை’ அளிக்கப்போகிறவர் யார் தெரியுமா? தொலைக்காட்சிகளில் பிரபலமான போலி டாக்டர் எஸ்.ஆர். நவீன் பாலாஜிதான். இதில், கலந்துகொள்வதாக அழைப்பிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பட்டப்படிப்புகளையே படிக்காமல் படித்ததுபோல் போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் போலி டாக்டர்கள்.


எஸ்.ஆர். நவீன் பாலாஜி


இந்த மாநாட்டில்தான் மலரினை வெளியிட்டு பேருரையாற்ற இருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். இப்படிப்பட்ட, மருத்துவர்களுக்கு திருமூலர் விருது வழங்கி வாழ்த்த இருப்பவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான ப.குமார். இதுகுறித்து, 18-வது மாநில மாநாட்டை தலைமை தாங்கி ஒருங்கிணைக்கும் கே.எஸ். சுப்பையாவிடம், “நீங்கள் என்ன மருத்துவம் படித்திருக்கிறீர்கள்? என்று நக்கீரன் டெக்னிக்குடன் பேசியபோது, “நான் பதிவு பெற்ற சித்த மருத்துவர்” என்றார்.


பதிவுபெற்ற சித்தமருத்துவர் என்றால் மாநாட்டு அழைப்பிதழில் உங்களது பெயருக்கு பக்கத்தில் ஆயுர்வேத பட்டப்படிப்பு படித்ததுபோல் பி.ஏ.எம்.எஸ். என்று அச்சடித்திருக்கிறீர்களே? என்று நாம் கேட்டபோது, “நான் சித்தாவும் ஆயுர்வேதமும் ஒரிஸாவிலுள்ள பிரஜா மருத்துவக்கல்லூரியில் கரஸ்ஸில் படித்திருக்கிறேன்” என்று மருத்துவப்படிப்பை தொலைதூரக்கல்வி அடிப்படையில் படித்ததாக அதிர்ச்சியூட்டினார்.


உங்களது மனைவி தமிழரசிக்கு பக்கத்தில் டாக்டர் என்று போட்டுள்ளீர்களே? என்று நாம் கேட்டபோது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படித்திருக்கிறார். அதனால், அவர் டாக்டர் என்று போட்டுக்கொள்கிறார்” என்றவரிடம், அப்படியென்றால் அவர் முனைவர்தானே? என்று நாம் விடாமல் கேட்டபோது, “அவரும் சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்பை படித்துள்ளார்” என்று அள்ளி வீசினார். ஸ்ஸ்ஸ்… ஹப்படா என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டு… நீங்கள் மருத்துவம் படித்ததற்கான சர்டிஃபிகேட்டை அனுப்புங்கள் என்றபோது, சர்டிஃபிகேட்டுகள் திருச்சியில் இருப்பதால் உடனடியாக வாட்ஸ்-அப்பில் அனுப்ப முடியாது” என்று சமாளித்தார்.

ஓ.பி.எஸ்-ஸுடன் எஸ்.தமிழரசி, கே.எஸ். சுப்பையா


“சரி, சர்டிஃபிகேட்தான் திருச்சியில் உள்ளது. நீங்கள் ஒரிஸாவில் சித்தா படிப்பை எத்தனை வருடம் படித்தீர்கள்? ஆயுர்வேத படிப்பை எத்தனை வருடம் படித்தீர்கள்? இந்த படிப்புகளை எல்லாம் எந்த வருடத்தில் படித்தீர்கள்?” என்று நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.


1971 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவத்திற்கான பட்டப்படிப்புகள் கொண்டுவரப்பட்டது. கே.எஸ். சுப்பையாவின் மகன் (பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேத டாக்டர்) விஜய் கார்த்திக்கிற்கு 35 வயது இருக்கும். சுமார் 55 வயதுக்குமேற்பட்ட கே.எஸ்.சுப்பையா பி.ஏ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத பட்டப்படிப்பும் படித்திருக்கமுடியாது. பி.எஸ்.எம்.எஸ். எனப்படும் சித்தமருத்துவ பட்டப்படிப்பையும் முடித்திருக்கமுடியாது. அப்படியென்றால், கே.எஸ். சுப்பையா ஒரு போலி மருத்துவர் என்பது உறுதியாகிறது.


இருந்தாலும் உறுதிபடுத்திக்கொள்ள சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்திலுள்ள தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் பதிவாளர் ராஜசேகரை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “கே.எஸ். சுப்பையா, அவரது மனைவி தமிழரசி, நவீன் பாலாஜி யாருமே மருத்துவம் படித்ததற்கான பதிவை எங்களிடம் செய்யவில்லை. பதிவு செய்தவர்கள் மட்டுமே டாக்டர்கள். மற்றவர்கள் போலிகள்தான்” என்று அதிர்ச்சியூட்டியவரிடம், “போலி டாக்டர்கள் என்று தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நாம் கேட்டபோது, “எல்லாம் அரசியல் செல்வாக்குதான். நான் என்ன செய்யமுடியும்?” என்று ஓப்பனாக சொல்லி பேரதிர்ச்சியை உண்டாக்குகிறார்.


பதிவாளர். ராஜசேகர்



ஒரு போலி டாக்டரே 19,000 கருக்கொலைகளை செய்திருக்கிறார் என்றல், பல்லாயிரக்கணக்கான போலி டாக்டர்கள் எத்தனை எத்தனை கருக்கொலைகளை செய்வார்கள்? எத்தனை பேரின் உயிரோடு விளையாடிக்கொண்டிருப்பார்கள்? இப்படிப்பட்ட, மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளலாமா? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நாம் கேட்டபோது, “அப்படியா?” என்று அதிர்ச்சியானவர், ‘விசாரித்துவிட்டு செல்கிறேன்” என்றார்.


நாடாளுமன்ற உறுப்பினர் குமாரிடம் நாம் பேசியபோது, “நான், இன்னும் அந்த அழைப்பிதழைக்கூட பார்க்கவில்லை. விசாரிக்கிறேன்” என்றார்.


சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து கேட்டபோதும் “உடனடியாக விசாரிக்கிறேன்” என்றார்.


போலி டாக்டர்களான கே.எஸ்.சுப்பையாவும் அவரது மனைவி தமிழரசியும் பலருக்கும் போலியான மருத்துவச்சான்றுகளை கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. பொதுமக்களின் உயிரோடு விளையாடும் யாராக இருந்தாலும் கொலைகாரர்கள்தான். அப்படிப்பட்ட, மாநாடுதான் நாளை ஆளுங்கட்சியின் செல்வாக்கோடு சென்னை தி.நகரில் நடக்கவுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT