ADVERTISEMENT

சொத்துக்களை குறிவைக்கும் சொந்தங்கள்...முன்னாள் மேயர் சம்பவத்தின் அதிர வைக்கும் பின்னணி! 

11:29 AM Aug 01, 2019 | Anonymous (not verified)

நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோர், நெல்லை டவுணிலிருந்து ஒதுங்கியிருக்கும் ரெட்டியாபட்டியிலுள்ள உமா மகேஸ்வரியின் இல்லத்தில் கடந்த 23-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT



வெறும் நகை, பணம் திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பதை, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்தான் போலீசால் உறுதிப்படுத்த முடிந்தது. இதற்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தது உமா மகேஸ்வரி, முருக சங்கரன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் நடந்த மொட்டை போடும் விவகாரம்தான். திருச்செந்தூர் சாலை யில் உள்ள வி.எம்.சத்திரம் சாந்திவனத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, உமா மகேஸ்வரிக்கு ஆண் வாரிசு இல்லாததால், யார் மொட்டை அடித்து கொள்ளி போடுவது என்ற பிரச்சனை வந்தது. மொட்டை போட்டு கொள்ளி போடுபவர்களுக்கு சொத்தில் பங்கு இருப்பதால், முருகசங்கரனின் தம்பியும் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான வரதராஜன், "நான்தான் மொட்டை போடுவேன்' எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT



ஆனால் உமா மகேஸ்வரியின் அண்ணன் மகனான மூளிகுளம் பிரபு, மகள் வயிற்று வாரிசு இருப்பதால், உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் மகன்கள்தான் மொட்டை போட்டு கொள்ளி வைக்க வேண்டும் என பேசி முடித்து இறுதிக் காரியமும் நடந்துள்ளது. ஆனா லும் முருக சங்கரனின் உடன்பிறந்தவர் வழியில் ஒருவர் மொட்டை போட்டதாக போலீசுக்குத் தகவல் கிடைத்து, அந்த நபரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது போலீஸ். இந்த மொட்டை மல்லுக்கட்டுக்கான பின்னணி காரணம், பினாமி பெயரில் இருக்கும் உமா மகேஸ்வரியின் பிரமிக்க வைக்கும் சொத்துக்கள்தானாம்.


தூத்துக்குடி ரோட்டில் இருக்கும் அரியகுளத்தில் ஹவுசிங் போர்டிற்குச் சொந்தமான இடத்தை வாங்கி நான்கு கடைகளுடன் கூடிய பிளாட். நெல்லை வண்ணாரப் பேட்டை இன்ஜினியரிங் காலேஜுக்குப் பின்புறம் 15 சி மதிப்புள்ள வயலுடன் கூடிய நிலம். திருச்செந்தூர் சாலை சீனிவாச நகரில் 2.5 சி மதிப்புள்ள நான்கு வீடுகள்+ கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ். பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை எதிரே ஒரு வீடு. இரண்டு ஏக்கர் பரப்பில் இப்போது குடியிருந்த வீடு. இந்த சொத்துக்களை சொந்தமாக்கும் முயற்சியில்தான் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கிறது தனிப்படை போலீஸ்.

சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் நெடுஞ்சாலைத்துறையின் ஏ.டி.யாக முருகசந்திரன் இருந்த போது, அந்த ஏரியாவின் பிரபல காண்ட்ராக்டர் ஒருவருக்கு ஏகப்பட்ட காண்ட்ராக்டுகளை ஒதுக்கி, அந்த ஏரியாவில் விளை நிலங்களை வாங்கியுள்ளார். யார், யாரிடமிருந்து நிலம் வாங்கினார், வாங்குவதற்கு உதவிய அந்த காண்ட்ராக்டர் யார் என்பதையும் தனிப்படை கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

பெட்டிக்கடை, மளிகைக் கடைக்காரர்களே சி.சி.டி.வி. கேமரா வைத்திருக்கும்போது, டவுணிலிருந்து ஒதுக்குப்புறமாக வசிக்கும் உமாமகேஸ்வரியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாதது போலீசுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முருக சந்திரனின் தனிப்பட்ட சில நடவடிக்கைகளுக்காகத்தான் சி.சி.டி.வி. கேமரா வைக்காமல் இருந்திருக்கலாம் என்பதையும், கொலையின்போது முருகசந்திரனின் மர்ம உறுப்பில் பலத்த வெட்டு விழுந்துள்ளதையும் வைத்து, அந்தக் கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கின்றனர்.


இதற்கிடையே வேலைக்காரப்பெண் மாரியம்மாள் மகள்களின் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. அறிவித்த 1 லட்ச ரூபாயை டி.பி.எம்.மைதீன்கான் 25-ஆம் தேதி வழங்கினார். 26-ஆம் தேதி நெல்லைக்கு வந்த கனிமொழி, உமாமகேஸ்வரியின் குடும்பத்திற்கும் மாரியம்மாளின் மகள்களுக்கும் ஆறுதல் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT