ADVERTISEMENT

ஓபிஎஸ்ஸிடம் நேரடியாக மோதிய எடப்பாடி!

03:19 PM Jun 03, 2019 | Anonymous (not verified)

பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடந்த ஜனாதிபதி மாளிகை முன்புற பந்தலில் ஒரு முக்கியமான நபரை எதிர் பார்த்து காத்துக் கிடந்தார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எதிர்பார்த்தது, ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் குமார். அ.தி.மு.கவின் ஒரே எம்.பி.யான தேனி தொகுதியின் ரவீந்திரநாத்குமார் மத்திய அமைச்சராக பதவியேற்க, காலை 10 மணிக்கே பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாக பரவிய செய்தி, அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்தது. பா.ஜ.க. வட்டாரத்திலும் இதற்கு சாதகமான பதில் வந்து கொண்டிருந்தது.

ADVERTISEMENT



ஓ.பி.எஸ். தனது முதல்வர் பதவி பறிபோனதும், சசிகலா என்ற ஒற்றைக் குடும்பத்தின் கையில் சிக்கியுள்ள கட்சியை மீட்க தர்மயுத்தம் நடத்துவதாக சொன்னார். பின்னர், எடப்பாடியுடன் இணைந்தார். அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கினார். தேனி தொகுதி வெற்றிக்காக எல்லா வேலைகளும் செய்யப்பட்டன. மகன் வெற்றி பெற்றதும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருகிறார். இதுதான் சசி குடும்ப ஆதிக்கத்திற்கு பதிலாக நடத்திய தர்ம யுத்தத்தின் நோக்கம் என ஓ.பி.எஸ்.ஸின் தர்ம யுத்தத்தின் போது அவருடன் நின்று அரசியல் நடத்தியவர்கள், குறிப்பாக மைத்ரேயனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் கோபமாகவே எதிரொலித்தது.

ADVERTISEMENT



ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவியா என முதல்வர் எடப்பாடி வீட்டில் கூடிய கட்சிக்காரர்களும் கலவரமடைந்தனர். அதை யெல்லாம் மீறி ரவீந்திரநாத் குமாரின் பெயரை பா.ஜ.க.வின் மேலிடம் எப்படி அமைச்சர் பதவிக்கு முன்மொழிந்தது என ஆச்சரியப்பட்டார்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க. மக்களவையில் பெரும்பான்மையை பெற்றாலும் மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெற கால அவகாசம் தேவைப்படுகிறது.



கடந்த முறை, முஸ்லிம் சமுதாயம் தொடர்பான முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் கடுமையான எதிர்ப்பால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அ.தி.மு.க.வின் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர்கள் பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படுகிறார்கள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளது. எனவே தமிழகத்தில் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் அதிகாரமற்றவர்கள் என வெளிக்காட்ட அ.தி.மு.கவுக்கு அமைச்சர் பதவி தர பா.ஜ.க. விரும்புகிறது என டெல்லியில் அமித்ஷா தரப்பிலிருந்து செய்தி வந்தது.



துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த மைத்ரேயன், கிருஷ்ணகிரி தொகுதியில் நின்று தோற்றுப் போன கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி என பல தரப்பிலிருந்தும் அமைச்சர் பதவிக் கோரிக்கைகள் வலுத்தன. ஓ.பி.எஸ். ஏற்கனவே தனது மகனின் அமைச்சர் பதவிக்காக வாரணாசியில் நரேந்திரமோடி வேட்புமனு தாக்கல் செய்யும் போதே போய் பேசினார். அப்போதே இ.பி.எஸ்., இதனை மோப்பம் பிடித்து, தங்கமணி, வேலுமணி மற்றும் இந்தி தெரிந்த வழக்கறிஞரான உறவினர் ஒருவரை வாரணாசிக்கே அனுப்பி வைத்தார்.



தேர்தல் முடிந்ததும் ஓ.பி.எஸ்.சின் மகன் மட்டுமே தேனியில் வெற்றி பெற, அ.தி.மு.க.விற்கு இடம் தருகிறோம் என சொன்ன அமித்ஷாவின் வார்த்தையைத் தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக உடும்பு பிடியாகப் பிடித்துக் கொண்டார். ஓ.பி.எஸ்.சின் இந்த மூவ் எடப்பாடியை பெருமளவு டென்ஷன் ஆக்கியது. டெல்லியில் மோடியும் அமித்ஷாவும் தேர்தல் முடிவுகள் வந்ததும் மூன்றுமுறை அமர்ந்து பேசினார்கள். அதே சமயத்தில், மூன்று முறையும் தமிழகத்தில் இ.பி.எஸ். வீட்டில் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ். டெல்லியில் மகனுக்காக லாபி செய்தார். ஓ.பி.எஸ்.சின் முயற்சியை தடுக்க இ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பியூஷ் கோயலின் உதவியை நாடினார்கள்.



அவரோ, "தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஐந்து வேட்பாளர்களும் தோற்றதற்கு, நாங்கள் அ.தி.முக.வுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் காலத்தில் கொங்கு மண்டலத்தில் வானதி சீனிவாசனுக்காக ஒரு தொகுதி கேட்டு இ.பி.எஸ்.சிடம் பேசினேன். அவர் தென்சென்னை, திருப்பூர் ஆகிய தொகுதிகளை எங்களுக்கு தர மறுத்து விட்டார். இப்பொழுது பெரிய தோல்வியை சந்தித்துவிட்டு ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி தரக்கூடாது என என்னை பேசச் சொல்கிறீர்கள். என்னால் முடியாது'' என கோபமாக மறுத்து விட்டார். ஓ.பி.எஸ். தனது முயற்சியை விடாமல் தொடர்ந்தார்.


ஓ.பி.எஸ்.ஸை ஏற்கனவே புறக்கணித்து டென்ஷனாக்கியிருந்த நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டார்கள். அவரும் "நத்திங் டூயிங்' என கோபமாக மறுத்துவிட்டார். வேறு வழியின்றி, நேரடியாக ஓ.பி.எஸ்.சிடமே மோத தயாரானார் இ.பி.எஸ். அதற்காக மோடியின் பதவியேற்பு விழாவிற்கு மூன்று நாள் பயணமாக டெல்லிக்குச் சென்று, ஓ.பி.எஸ். மகனின் மந்திரி பதவி முயற்சிகளை முறியடிக்க திட்டமிட்டிருந்த எடப்பாடி பல வியூகங்களை வகுத்தார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT