Skip to main content

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி... இரண்டே நாளில் சீரமைக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம்..!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

ஒவ்வொரு தொகுதி மக்களும் தங்கள் பகுதி பிரச்சனைகளை, குறைகளை, தங்கள் பகுதிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எம்.எல்.ஏ.க்களை நாடி அவர்கள் வீடுகளுக்கும், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் இப்படி சிரமம் அடையக்கூடாது என்பதற்காக 1996 - 2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த கலைஞர், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களைச் சந்திப்பதற்கு அந்தெந்த தொகுதியிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அலுவலகம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கலைஞரின் எண்ணங்கள் சரியான முறையில் நிறைவேறவில்லை என்றுதான் கூற வேண்டும். காரணம், அந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் பல இடங்களில் முடங்கிக் கிடக்கின்றன. சுமார் 90 சதவிகித அலுவலகங்கள் மூடியே கிடக்கின்றன. 

 

உதாரணத்திற்கு, தற்போது கடலூரில் உள்ள தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 2006ஆம் ஆண்டு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயப்பன், மக்களைச் சந்திப்பதற்காக கட்டப்பட்டது. இதை அப்போதைய வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். 

 

கலைஞர் இலட்சிய நோக்குடன் கட்டிய அந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் இடமாக மாறிக் கிடக்கும் அவலத்தையும், அது குறித்த செய்தியையும் கடந்த 28ஆம் தேதி நமது நக்கீரன் இணையதளத்தில் ‘எம்.எல்.ஏ. அலுவலகமா.. பேய் வீடா..? கடலூரில் அவலநிலை..’ எனும் தலைப்பில் புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டோம். இந்தச் செய்தியின் எதிரொலியாக, நேற்று (30.12.2020) காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முழுவதும் சுற்றிலும் காடாக மண்டிக் கிடந்த செடி, கொடி மரங்கள் வெட்டி சுத்தம் செய்யப்பட்டன. 

 

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெயரே சாலையில் செல்வோருக்குத் தெரியாத வகையில் இடையூறாக இருந்த மரங்கள், செடி கொடிகள் வெட்டப்பட்டு, அலுவலகத்தின் பெயர் பளிச்சென வெளியே தெரியும் வகையில் ஆனதற்கு காரணம் நக்கீரன் இணையதள செய்தியின் எதிரொலி என்கிறார்கள் கடலூர் தொகுதி வாக்காளர்கள். பாழடைந்து கிடந்த அலுவலகம் சீரமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் தொகுதி மக்கள், இனிமேலாவது அலுவலகத்தை முறையாக திறந்து, ஊழியர்களை நியமித்து மக்களின் கோரிக்கைகள், குறைகள், பிரச்சனைகளைக் கேட்டறிந்து அமைச்சர் சம்பத் தீர்த்து வைப்பாரா அல்லது அப்படியே மீண்டும் பழைய மாதிரியே மூடிக்கிடக்குமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். அலுவலகத்தைத் திறந்து அமைச்சர் மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று அத்தொகுதி வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 

ஆனால், சுத்தம் செய்தவுடன் சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, அப்பகுதியில் உள்ள பசு மாடுகள் அலுவலகத்தின் முன்பு குவிந்து நின்றன.

 

மனுநீதி சோழன் மகன் தேரில் செல்லும்போது, ஒரு பசுவின் கன்று அந்தத் தேர்க் காலில் அகப்பட்டு இறந்து போனதைக் கண்டு வேதனையடைந்த தாய்ப் பசு, மனுநீதி சோழனின் அரண்மனை வாயிலில் இருந்த மணியை அடித்து தன் கன்றின் இறப்புக்கு நீதி கேட்டதாம். அதேபோல், அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நீதி கேட்க வருவோம் என்கிறார்கள் அத்தொகுதியில் உள்ள மக்கள்.

 

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அமைச்சரைச் சந்திக்க மனுக்களுடன் வரும் மக்களுக்கு நீதி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.