Skip to main content

எம்.எல்.ஏ. அலுவலகமா.. பேய் வீடா..? கடலூரில் அவலநிலை..!

Published on 28/12/2020 | Edited on 31/12/2020

 

Cuddalore Legislator Sampath Office

 

ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் வரும்போதும், ‘நான் ஏழை எளிய மக்களின் தொண்டன், சேவகன் என்னை வெற்றிப் பெற வைத்தால் உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். 24 மணி நேரமும் உங்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக எனது அலுவலகம் திறந்தே இருக்கும்..’ இப்படி தெருத்தெருவாக வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆனப்பிறகு மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்கிறார்களா? நிறைவேற்றுகிறார்களா? என்றால் அதுதான் இல்லை. 

 

அதற்கு உதாரணமாகத் திகழ்கிறது ஒரு அமைச்சரின் தொகுதி அலுவலகம். கடலூர் தொகுதியில் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பெற்றி பெற்று தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கிறார் சம்பத்.  

 


ஒவ்வொரு தொகுதி மக்களும் தங்கள் பகுதி பிரச்சனைகளை குறைகளை தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எம்.எல்.ஏ.க்களை நாடி அவர்கள் வீடுகளுக்கும் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். மக்களின் இப்படி சிரமம் அடைக்கூடாது என்பதற்காக அரசு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களை சந்திப்பதற்கு அந்தெந்த தொகுதியிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அலுவலகம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அலுவலகம் கட்டிக் கொடுத்துள்ளது. 

 

 

ஆனால், அந்த அலுவலகங்களில் அமர்ந்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகளை கேட்கிறார்களா? தன்னை சந்திக்க வரும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்களா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இது 90 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் நிலை. பெரும்பாலான அலுவலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதில், கட்சி பாகுபாடு இல்லை. அதற்கு உதாரணம் கடலூரில் உள்ள அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 

 


2011ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 6 மாத காலம் இந்த அலுவலகம் செயல்பட்டுள்ளது. அதன்பிறகு கேட்பாரற்ற நிலையில் பாழடைந்து கிடக்கிறது. பேய் படங்கள் எடுக்கும் மர்மம் நிறைந்த கட்டிடங்கள்போல் மாறியிருக்கிறது அமைச்சர் சம்பத்தின் அலுவலகம். 

 

Cuddalore Legislator Sampath Office


கடலூர் சீதாராம் நகரில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ளது இந்த அலுவலகம். வளாகத்தில் புயலில் சாய்ந்த மரங்கள், பூட்டப்பட்ட அலுவலக கேட்டு துருபிடித்து போய் கிடக்கின்றன. அலுவலக சுவர்கள் ஆங்காங்கே பெயர்ந்தும் உதிர்ந்தும் எப்பொழுது விழும் என்று தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகள், பாம்புகள், வௌவால்கள், ஆந்தைகள் போன்ற பறவைகளும் விஷ ஜந்துக்களும் குடியிருந்து வருகின்றன. 


 

அமைச்சரை சந்திக்க வேண்டுமானால் தொகுதி மக்கள் கூத்தப் பக்கத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றுதான் சந்திக்க வேண்டும். அல்லது அவரது கட்சி அலுவலகத்திற்குச் சென்று சந்திக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட நிலை என கடலூரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவரிடம் கேட்டோம். அவர், “இந்தக் கட்டிடம் 2006ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஐயப்பன். இந்தக் கட்டிடத்தை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். 

 

Cuddalore Legislator Sampath Office
                                                            வாஞ்சிநாதன் 


அதன்பிறகு அமைச்சர் சம்பத், கடலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்த அலுவலகம் முறையாக செயல்படவில்லை. மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை அமைச்சரிடம் கூறவேண்டுமானால் அவரது வீட்டுக்கோ அல்லது கட்சி அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். மேலும், அவர் சென்னையிலிருந்து எப்போது கடலூர் வருகிறார் என்று காத்திருந்து மனு கொடுத்து வருகிறார்கள். இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முறையாக உதவியாளர்களை அமர்த்தி அமைச்சர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் கொடுக்கும் மனுக்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

ஒரு அமைச்சரே தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பாழடைந்த நிலையில் வைத்துள்ளார் என்றால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. மாவட்டத்தின் தலை நகரத்தில் இருக்கும் ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் நிலை பரிதாபமாக உள்ளது. இவர்தான் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே சீர்ப்படுத்தி மக்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியாத இவர், தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்றம் செய்து எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்திகொடுத்து இருப்பார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். 

 


மக்களின் தொண்டன், சேவகன் என்று கூப்பாடு போட்டு ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்த பிறகு அவர்களை தேடி சென்று குறைகளைப் போக்க வேண்டும். அந்த மக்களே தேடி வந்து பார்க்க ஒரு அலுவலகம் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஓட்டு கேட்க வாக்காளரை தேடி போகும் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்ற பிறகு அடிக்கடி மக்களை சந்திக்கவில்லை என்றாலும் மாதத்தில் ஒருநாள் தொகுதியை வலம் வர வேண்டும். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாளாவது முழு நேரமும் அமர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டங்கள், பிரச்சனைகள் புரியும்.

 

இந்த ஆட்சியின் லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு  அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அலங்கோலமே சாட்சி.  மேலும், இந்த அலுவலகம் திறக்கப்படாததற்கு சென்டிமென்ட்டும் காரணம் என்று கூறப்படுகிறது.” என்கிறார்.

 

இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முறையாக செயல்படாததற்கு பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள் கடலூரில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள். அதில் சுவாரசியம் என்னவென்றால், 2006ல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த அலுவலகத்தில் அமர்ந்து செயல்பட்டவர் ஐயப்பன். இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து செயல்பட்டால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு கிடைக்காது என்ற மூடநம்பிக்கை இருப்பதாகவும் அதை நம்புகிறார் அமைச்சர் என்றும் கூறுகிறார்கள்.
 

 

இதுகுறித்து கருத்து கேட்பதற்கு அமைச்சரின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டோம், ‘தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை’ என்ற பாட்டு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஃபோனை எடுத்து யாரும் பதில் பேசவே இல்லை. அமைச்சர் விளக்கம் தந்தால் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.

 

 

 

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.