குறிப்பாக, சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூடுவதால், கரோனா தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காற்று போகும் இடைவெளிகூட அங்கு இல்லை என்று, ஏற்கனவே ஏப்ரல் 18 – 21 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். மேலும், இதை கவனிக்க வேண்டிய அதிகாரிகளோ, காவல்துறையினரோ மார்க்கெட் வாசலை தாண்டி உள்ளே வருவதில்லை. இதனால், கூடிய சீக்கிரமே கரோனா பரவலுக்கான ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் மாறப்போகிறது என்று, அங்கு கடை நடத்தி வருபவர்களின் குமுறலை அதில் பதிவு செய்திருந்தோம். அரசு காட்டிய அலட்சியத்தால், அந்தச் செய்தி உண்மையாகி இருக்கிறது.
இதையடுத்து, கார்ப்பரேஷன் கமிஷனர், சி.எம்.டி.ஏ. கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, 27ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, “கரோனா தொற்று இந்தப் பகுதியில் வேகமாக பரவுவதால், மார்க்கெட்டை தற்காலிகமாக கேளம்பாக்கம் பகுதிக்கு ஷிஃப்ட் செய்யவேண்டும்” என்று அதிகாரிகள் தரப்பு வலியுறுத்தியது. இதை ஏற்காத மார்க்கெட் தரப்பினரோ, “கேளம்பாக்கமெல்லாம் ரொம்ப தூரம். வேண்டுமென்றால், ஆம்னி பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்றிக் கொள்கிறோம். அனுமதி தாருங்கள்” என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், “நிலைமை மோசமாகிட்டு இருக்கு. நாளுக்கு நாள் பரவல் அதிகமாகிட்டே வேற வருது. இப்போ இதை சரிசெய்யலைனா, நாளைக்கு கடை திறக்கவே முடியாம போயிடும்” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், கூட்டம் மறுநாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருக்கும் சில்லரை வியாபாரிகள், “வெளியே பஸ்-ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை போட்டுக் கொள்ளுங்கள் என்று லேசாக சொல்லிவிட்டார்கள். ஆனால், எங்களது குடோன் மார்க்கெட்டிற்கு உள்ளேதான் இருக்கிறது. அங்கிருந்து வண்டி, கூலியாட்கள் வைத்து காய்கறிகளை கொண்டுவந்தால், கண்டிப்பாக விலையை ஏற்றிவைத்து விற்கவேண்டி இருக்கும். இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும். மேலும், மார்க்கெட்டில் எங்களது கடையில் வியாபாரம் செய்தால், கடையில் பொருட்களை போட்டுவிட்டு அப்படியே கிளம்பிவிடலாம். இப்படி தெருவில் விற்றால், அந்தப் பொருட்களை எப்படி பாதுகாப்பது என்ற அச்சமும், கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடமாடும் சோதனை வாகனம் மற்றும் மருத்துவக் குழுவினரை நியமித்து, அங்கிருப்பவர்களுக்கு கரோனா தொற்று சோதனை எடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல், இதுபோன்ற தினசரி வருமானத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்களை பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமை. எல்லாவற்றையும் தாமதமாக உணரும் அரசு, இனியாவது விழித்துக் கொள்ளுமா?