ADVERTISEMENT

கருணைக்கொலை மறுக்கப்பட்ட அருணா ஷென்பாக்கை நினைவிருக்கிறதா?

02:01 PM Mar 09, 2018 | Anonymous (not verified)

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக்கொலை அறிமுகம் செய்யப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று அதை சில வரைமுறைகளுக்கு உட்படுத்தி இந்தியாவிலும் நடைமுறைக்குக் கொண்டுவர உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.

ADVERTISEMENT

கருணைக்கொலைகளை அனுமதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று இது தொடர்பான தீர்ப்பினை தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கும் என கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்தத் தீர்ப்பில் தீர்க்கமுடியாத அல்லது மீளமுடியாத நோய்த்தாக்கத்தில் இருப்பவர்களை, மருத்துவ உபகரணங்களை அகற்றுவதன் மூலம் கருணைக்கொலை செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, தீராத நோய் உள்ளவர்கள், நலம் பெற வழியில்லாதவர்களை சில விதிகளுக்கு உட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம் மற்றும் செயற்கை உயிர்காக்கும் முறைகளைக் கைவிட்டு உயிர்துறக்கச் செய்யலாம் என தீர்ப்பளித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பு பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ள இந்தத் தருணத்தில், பாலியல் வன்கொடுமையால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து 42 ஆண்டுகளாக படுத்த படுக்கையாய்க் கிடந்த அருணா ஷென்பாக்கின் வாழ்வும், கருணைக்கொலை மறுக்கப்பட்ட வழக்கும் சற்றே நினைவுக்கு வருகிறது.

யார் இந்த அருணா ஷென்பாக்?

மும்பையில் உள்ள பரேல் பகுதியின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் அருணா ஷென்பாக். 1973ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் உடைமாற்றிக் கொண்டிருந்த அருணா ஷென்பாக்கை, அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளராக பணிபுரிந்த சோஹன்லால் பாரதா வால்மீகி கடுமையாக தாக்கினார். நாயைக் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை இறுக்கமாகக் கட்டி அவரை பாலியல் வன்புணர்வு செய்தார். அருணாவின் தற்காப்புகளைத் தடுக்க அவரது மார்பகத்தில் முழங்காலால் அழுத்தியதில், மூளைக்கு ஆக்சிஜன் செல்லும் நரம்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அவரது கர்பப்பையும் கடுமையாக சேதமடைந்திருந்தது.

மறுநாள் காலை ரத்தவெள்ளத்தில் கிடந்த அருணாவை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் சுயநினைவில் இல்லை. அதைத் தொடர்ந்து 37 ஆண்டுகளும் அவருக்கு சுயநினைவு திரும்பவேயில்லை.

அருணாவின் இந்த நிலையைக் கண்ட மனித உரிமைகள் ஆர்வலர் பின்கி விராணி என்பவர் அருணாவிற்கு கருணைக்கொலை கோரி 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான தீர்ப்பினை மார்ச் 7, 2011 உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் பின்கி விராணியின் கோரிக்கையும், முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், அவர் அருணாவிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவர் என்பதால் பின்கியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகள் சேர்த்து 42 ஆண்டுகள் எந்தவித சுயநினைவும் இல்லாமல் மூர்ச்சையாகக் கிடந்த அருணா, கடந்த மே 18, 2015 அன்று நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு மரணம் அடைந்தார்.

ஒருவர் கண்ணியமாக இறப்பதற்கான எல்லா உரிமையும் அவருக்கு உண்டு என உச்சநீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது. இதற்கான சட்டம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுவரை நீதிமன்றத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம், இதை வணிகமாக்கும் நோக்கங்களோ, மற்ற தவறுகளோ நிகழாமல் இருக்குமா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT