Skip to main content

அன்றே சொன்ன நக்கீரன்; வெளிவரும் அண்ணாமலை ‘ஹனி ட்ராப்’ இரகசியங்கள்! 

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Annamalai video strategy

 

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பெண்களை வைத்து ஆண்களை வலையில் வீழ்த்தும் ஹனி ட்ராப் வீடியோக்களை உருவாக்குகிறார். இதற்கு மத்திய அமைச்சரான முருகன் துணை புரிந்தார் என கே.டி.ராகவன் ஆபாச வீடியோ வரும்போதே 'முருகன் உருவாக்கிய வீடியோ' எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது நக்கீரன்.

 

அந்த ஹனி ட்ராப் வீடியோக்கள் இப்பொழுது எதிர்ப்புறமாகச் சுழன்று அதை உருவாக்கிய அண்ணாமலையைப் பதம் பார்த்துள்ளது என்கிறார்கள் சமீபத்தில் பா.ஜ.க. பற்றி ஊடகங்களில் வெளியான வீடியோக்களைப் பற்றி பேசும் பா.ஜ.க. தொண்டர்கள். கே.டி.ராகவனுக்கும், செம்பாக்கம் வேதா என்கிற காஞ்சி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கும் இடையே கட்சிப் பதவிகள் வழங்குவதில் பிரச்சனை இருந்தது. கே.டி.ராகவன் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார். செம்பாக்கம் வேதா, அந்த வழக்கறிஞர் மற்றும் முருகனால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட சென்னை மாநகர வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் முருகன் ஆகியோர் இணைந்து கே.டி. ராகவனை ஹனி ட்ராப் செய்ய முடிவெடுத்தார்கள்.

 

இந்த ஹனி ட்ராப் என்பது கர்நாடக அரசியலில் கடைப்பிடிக்கக்கூடிய டெக்னிக். எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபொழுது அவருக்கு எதிராகச் செயல்பட்ட எட்டு அமைச்சர்களை ஒரு சமூக சேவகர் மூலம் ஹனி ட்ராப்பில் சிக்க வைத்தார் அடுத்த முதல்வர் பதவிக்கு தான் வரவேண்டும் என ஆசைப்பட்ட பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் பி.எல். சந்தோஷ். கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஹனி ட்ராப் வேலைகளை பி.எல்.சந்தோஷுக்காக செய்து கொடுத்தது அப்போது கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை. அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவராகவும், முருகன் மாநிலத் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில்... பா.ஜ.க.வின் தேசிய முகமாக அறியப்பட்டவர் கே.டி.ராகவன். அவரை அரசியலில் இருந்து காலி செய்யத் திட்டமிட்ட அண்ணாமலையும் முருகனும் சேர்ந்து கே.டி.ராகவனை பெண்களிடம் வீடியோ காலில் பேச வைக்க ஒரு திட்டம் தீட்டினார்கள். அதை, முருகனுக்கு நெருக்கமான கே.டி.ராகவனால் பழிவாங்கப்பட்ட ஒரு வழக்கறிஞரை வைத்து செம்பாக்கம் வேதா மூலம் ஒரு பெண்ணைப் பிடித்து தூண்டில் போட்டு அரங்கேற்றினார்கள்.

 

அதை வெற்றிகரமாக அவர்கள் அரங்கேற்றியதும் பி.எல்.சந்தோஷ் களத்திற்கு வந்தார். கே.டி.ராகவனின் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அண்ணாமலை, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரானார். அத்துடன் ஹனி ட்ராப் விசயங்கள் நின்றுவிடவில்லை. அப்பொழுது பா.ஜ.க.வின் பிரபலமாக இருந்த கேசவ விநாயகம் போன்ற பதினைந்து தலைவர்களின் வீடியோக்கள் இருக்கிறது என்று, இந்த வீடியோக்களை வழக்கறிஞர் உதவியுடன் எடுத்த டீம் அறிவித்தது. ஒட்டுமொத்த பா.ஜ.க.வுமே இன்றுவரை அண்ணாமலைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது எங்கே தங்களது லீலைகளை வீடியோக்கள் வடிவில் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என்கிற பயத்தில்தான் என்கிற பா.ஜ.க.வினர், அந்த வீடியோக்கள் என் வசம்தான் இருக்கின்றது என அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வந்த கட்சியின் அவல நிலையை விளக்குகிறார்கள்.

 

சமீபத்தில் தினேஷ்ரோடி என்பவர் எடப்பாடியின் உருவ பொம்மையை கோவில்பட்டியில் எரித்தார். அண்ணாமலையின் ரகசிய ஆபரேஷன்களில் பங்குபெற்று அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்து அண்ணாமலைக்கு பணம் வசூல் செய்து கொடுத்த தினேஷ்ரோடிக்கு எதிராக எடப்பாடி அமித்ஷாவிடமும், நட்டாவிடமும் புகார் செய்தார். இது முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அண்ணாமலையின் கூட்டுச் செயல் என எடப்பாடி சொன்னதைக் கேட்டு டென்ஷனான அமித்ஷா, எடப்பாடிக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். அதனால் கேசவவிநாயகம், தினேஷ்ரோடியை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். தினேஷ் ரோடி, அண்ணாமலையிடம் "என்னை நீக்கினால் நீங்கள் செய்த செயல்களை எல்லாம் பிரஸ்மீட் வைத்து சொல்வேன்'' என மிரட்ட, நீக்கப்பட்ட தினேஷ்ரோடி மறுநாளே மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில் பா.ஜ.க.வில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு டைரக்டர்களை நியமிக்கும் பணி தொடங்கியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவர்த்தன் மற்றும் ஆர்.ஜே.ஆனந்த் ஆகியோர் டைரக்டர்களாக நியமிக்கப்பட்டார்கள். இதில் கோவர்த்தன் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆர்.ஜே.ஆனந்த் மீதும் பல்வேறு விதமான புகார்கள் உள்ளன. இதில் கோவர்த்தன் முக்கியத் தலைவரான கேசவவிநாயகத்துக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் வீடு வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதே போல தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் செந்தில் என்பவர் போலி நிதி நிறுவனங்களிடம் அண்ணாமலை டீம் வசூலிக்கும் பணத்தில் கோடிக் கணக்கில் லஞ்சம் பெறுகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொள்கை, சித்தாந்தம் போன்றவற்றைப் பேசுவார்கள். பணம் வாங்க மாட்டார்கள் என்கிற பிரச்சாரங்களை மீறி, செந்தில் வாங்கிக் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெரும் புகாராக எழுந்தது.

 

அதற்குப் பதிலளித்த அண்ணாமலை டீம், ஆர்.எஸ்.எஸ். செந்தில் மட்டுமா பணம் வாங்குகிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வந்த பி.எல்.சந்தோஷும் எங்களிடம் பணம் வாங்குகிறார் என கட்சிக்குள்ளேயே தம்பட்டம் அடித்தது. இப்படி புகார் மீது புகார் ஒருபக்கம் எழ, மறுபக்கம் ஊடகவியலாளர்களை ‘செட்டப்’ செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அண்ணாமலை கருத்துக்களை உருவாக்குகிறார். அதில் தி.மு.க.வை மிக மோசமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்புகிறார் என்கிற விசயமும் வெளிவந்தது. இதையெல்லாம் முன்கூட்டியே கணித்த மாநில அரசின் உளவுப்பிரிவுத் தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம், அவருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சிலரை வைத்து, அண்ணாமலைக்கு நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டியிடம் பேச வைத்தார்.

 

ஆர்.எஸ்.எஸ். செந்தில், அண்ணாமலை உட்பட பலரும் இப்படியெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என போட்டுடைத்ததோடு, பா.ஜ.க.வில் கொலைக் குற்றவாளிகளைக் கூட எப்படிச் சேர்க்கிறார்கள் என அந்த வீடியோவில் உளறிக்கொட்டினார். அத்துடன், ஊடகவியலாளர்களை ஒரு மது விருந்தில் சந்திக்க வைத்து சமூக வலைத்தளங்களில் எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்துக்கள் பணம் கொடுத்து உருவாக்கப்படுகிறது என்பதை விவரிக்க வைத்தார். பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த அமைப்பும் அண்ணாமலையின் கிரிமினல் மூளையால்தான் இயக்கப்படுகிறது என புதிதாக வெளிவந்த வீடியோக்கள் தெளிவாக உணர்த்துகிறது. இவை அனைத்துமே ஏற்கெனவே நக்கீரனில் செய்தியாக வெளிவந்த விவகாரங்கள்தான். வெளியான புதிய வீடியோக்கள், எங்கே தங்களது ஆபாச வீடியோக்களையும் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என பயந்துகொண்டிருந்த பா.ஜ.க. தலைவர்களை பேச வைத்துள்ளது. அண்ணாமலையை நீக்கிவிட்டு த.மா.கா. தலைவரான ஜி.கே.வாசனை பா.ஜ.க. தலைவராக்க பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானியும், பியூஸ் கோயலும் சில பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

 

கிரிமினல் வேலைகளும் கட்டிங் வாங்குவதும் பா.ஜ.க.வின் கொள்கையாகிவிட்டது என்கிற அலறல் பா.ஜ.க.வில் வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அன்று கே.டி.ராகவனுக்காக அண்ணாமலை கூர் தீட்டிய ஹனி ட்ராப் கத்தி, பூமராங் போல திரும்பி வந்து அண்ணாமலையையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்து எந்த வீடியோ வரும்? என்ன நடக்கும்?

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.