Skip to main content

தங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் அமமுக தோல்வி அடைந்ததால், மக்கள் அமமுகவை ஏற்கவில்லை என்று அமமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
 

தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி.
 

அமமுக துவங்கியபோது டிடிவி தினகரனுடன் பக்க பலமாக இருந்தவர்கள் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன். இதில் சாமி உடல்நிலை சரியில்லாமல் காலமானார். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார். தங்க தமிழ்செல்வன் தற்போது அமமுகவில் இருந்து வெளியேறியிருப்பது பற்றி...
 

தினகரனை நம்பி சென்றவர்கள் யார் என்றால், அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலரும், அந்த குடும்பத்தால் பலன் அடைந்தவர்களும்தான். முதலில் அதிமுக தலைமையை கைப்பற்றுவோம் என்று தினகரன் சொன்னார். அதுவரை அவர் பின்னால் சென்றவர்கள் அவருடன் இருந்தனர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின்னர் தினகரன், சின்னம் ஒரு பொருட்டே கிடையாது. இரட்டை இலைக்கு வேல்யூ கிடையாது. அமமுகவில் அதிமுக இணைய வேண்டும் என தன்னை மிகப்பெரிய தலைவராக காட்டிக்கொண்டார். 

 

ttv dinakaran - thanga tamilselvan


 

இதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக தொண்டர்கள் அவரைவிட்டு தள்ளி வந்துவிட்டனர். அப்படி தள்ளி வந்ததன் முடிவுதான் இந்த தேர்தலின் முடிவுகள். இந்த முடிவுகள் வெளியானவுடன் அமமுகவில் இருந்த  இரண்டாம் கட்ட தலைவர்களும் அமமுகவை மக்களும், அதிமுக தொண்டர்களும் ஏற்கவில்லை என்று உணர்ந்தனர். அமமுக என்பது அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத ஒரு அமைப்பாக இருக்கிறது என்று உணர்ந்தனர். இதனால்தான் அதிமுகவால் உருவானவர்கள் அமமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள். தங்க தமிழ்செல்வனும் அதேபோல்தான் வெளியேறியுள்ளார்.
 

ஒவ்வொரு கட்சியிலும் தலைமை மீதும், நிர்வாகிகள் மீதும் சலிப்புகள் இருக்கும். அதனை சக கட்சிக்காரர்களுடன் பகிர்ந்து கொள்வது இயற்கை. வெளியே பேசும்போது, எங்கள் தலைவர், எங்கள் உயிர் என்றுதான் பேசுவார்கள். இது எல்லா கட்சியிலும் நடக்கிற ஒன்றுதான். அப்படி தங்க தமிழ்செல்வன் பேசியபோது, பதிவு செய்து தினகரன் தரப்புத்தான் வெளியிட்டது. 
 

ஏனென்றால் அதிமுகவில் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவாக, எம்பியாக இருந்தவர், மேலும் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். அவர் அமமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்லும்போது அவருடன் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர். 
 

தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்களே...
 

அந்த அளவுக்கு அரசியலில் ஒன்றுமே தெரியாதவரா தங்க தமிழ்செல்வன். ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருந்தபோதே அவரை எதிர்த்து அரசியல் செய்தவர். 


 

K. C. Palanisamy


 

ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்பட்டுத்தான் அவர் கட்சி மாற நினைக்கிறார் என்று அமமுகவினர் கூறுகிறார்களே...


இதெல்லாம் ஒரு யூகமாகத்தான் இருக்கும். அதிமுகவில் ஏற்கனவே மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் விடுவார்களா? எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என சசிகலா தேர்வு செய்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்றார். அப்போது தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்ததால் அந்த மாவட்டத்திற்கு தங்க தமிழ்செல்வனை அமைச்சராக்கலாம் என்று தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மூன்று பேரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் தினகரன், தங்க தமிழ்செல்வனை அமைச்சராக்கக்கூடாது என்று சொல்லியுள்ளார். பின்னர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை பெற்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்க முடியாது என்று தினகரன் பக்கம் வந்தார் தங்க தமிழ்செல்வன். பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் அன்றைக்கே அமைச்சர் பதவியை பெற்றிருப்பார் தங்க தமிழ்செல்வன். 
 

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைக்க விரும்புவாரா எடப்பாடி பழனிசாமி? 
 

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் பயன்படுத்த நினைப்பார் எடப்பாடி பழனிசாமி. ஏனென்றால் எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே பிரச்சனை ஏற்பட்டால் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்காமல் இருக்க, தங்க தமிழ்செல்வனை பயன்படுத்த நினைப்பார். 
 


 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.