Skip to main content

 அ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்! 

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியை முக்கியமாக கருதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு நாளும் சேலத்தில் இருந்தபடியே தேர்தல் பணிகளை உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார். அமைச்சர்களையும் அவர்களது தலைமையில் இயங்கிய தொகுதிப் பொறுப்பாளர்களையும் தொடர்புகொண்டு எல்லா விவரங்களையும் விசாரித்தார். பாஸிட்டிவ் பதில் கிடைத்தபின், உளவுத்துறையினரிடமும் இது குறித்து விசாரித்தார் எடப்பாடி. அவர்கள் தந்த தகவல் வேறு ரகம்.

 

admk alliance



இது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் என சீனியர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட தொகுதிகளைத்தவிர, மற்ற இடங்களில் பணப்பட்டுவாடா முழுமையாக செய்யப்படவில்லை. கொடுக்கப்பட்ட அமௌண்ட்டுகளில் பாதியை நிர்வாகிகளே அமுக்கிக்கொண்டனர்.அதாவது, ஒரு பூத்தில் 1200 வாக்குகள் இருக்கிறதென்றால் சிலருக்கு கொடுத்துவிட்டு பலருக்கும் கொடுக்கவில்லை. இதனால் பணம் கிடைக்காத அ.தி.மு.க. வாக்காளர்களே அதிருப்தியடைந்துள்ளனர். 

 

dmk alliance



மேலும், கட்சி சாராத பொதுவான வாக்காளர்கள், பெண் வாக்காளர்களிடம் இந்த ஆதங்கம் அதிகமாக உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகப்போக வாய்ப்பு உண்டு என்பது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனையறிந்து கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி, அமைச்சர்களை திட்டமுடியாது என்பதால் நிர்வாகிகளிடம் கோபத்தைக் கடுமையாகக் காட்டியுள்ளார். "தேர்தல் முடிவுகள் நெகடிவ்வாக வந்தால் தொலைச்சுடுவேன் தொலைச்சு. என்ன செய்யச்சொல்லி உங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதோ அதை செய்து முடியுங்கள். முடிவுகள் நல்லபடியாக வந்தால் நீங்கள் எதிர்பார்க்காததையும் செய்வேன்' என நம்பிக்கையும் கொடுத்துள்ளார்.

 

eps



இதனையடுத்தே, பதுக்கப்பட்ட பணத்தை வெளியே எடுத்து உற்சாகத்துடன் பணப்பட்டுவாடாவை கடைசி 2 நாளும் செய்து முடித்துள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். இதனை உன்னிப்பாக விசாரித்தபடியே இருந்த முதல்வர், 70 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து திருப்தியடைந்தார். இடைத்தேர்தல் தொகுதிகளில்தான் அவரது கவனம் அதிகமாக இருந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கிடையே, வாக்குப்பதிவு நாளன்று இடைத்தேர்தல் தொகுதிகளில் ஓட்டுப் போட்டு விட்டு வந்த வாக்காளர்களின் மனநிலையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் எடப்பாடி. அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள் அவருக்கு உற்சாகத்தைத் தரவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

 

modi



இது ஒருபுறமிருக்க, தலைமையிலிருந்து கொடுக்கப் பட்ட பணத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் பதுக்கிக் கொண்டனர் என்கிற உளவுத்துறையின் தகவலால் அப்-செட்டாகியிருந்த எடப்பாடிக்கு, கடந்த 16-ந் தேதி இரவு டெல்லியிலிருந்து நினைவுபடுத்திய ஒரு தகவல் அவரை கவலையடைய வைத்தது. அது என்ன தகவல் என டெல்லி தரப்பில் விசாரித்தபோது, தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 25 இடங்களை கைப்பற்றியாக வேண்டுமென்பது மோடி-அமித்ஷாவின் எதிர்பார்ப்பு.

அத்துடன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் தத்துவார்த்த அரசியலை மிகக்கடுமையாக எதிர்ப்பவர்களான கனிமொழி, ஆ.ராசா, திருமாவளவன் ஆகியோரும் காங்கிரசில் இருந்தபடி இதே தத்துவார்த்த அரசியலை எதிர்ப்பவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் திட்டம். நால்வரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அந்த திட்டத்தை எடப்பாடிக்கு தெரியப்படுத்தி விட்டனர். 

இந்த நிலையில்தான், கடந்த 16-ந் தேதி இரவு அதனை மீண்டும் எடப் பாடிக்கு நினைவுபடுத்தியது டெல்லி. திட்டத்தை நினைவு படுத்திய டெல்லியிடம், நீட் தேர்வு, எட்டுவழிச் சாலை குறித்து மத்திய அமைச்சர்களின் நெகட்டிவ் பேச்சுகளை நினைவு படுத்தி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அதனையெல்லாம் பொருட்படுத்தாத டெல்லி, தங்களது ஐடியாலஜிக்கல் டார்கெட்டில் இருக்கும் நால்வரையும் தோற்கடிப்பதில் கவனம் செலுத்துங்கள் என அழுத்தமாக வலியுறுத்தியது'' என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 
 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.