Skip to main content

பா.ஜ.க.வுடன் கூட்டணி! அ.தி.மு.க. வெற்றியைப் பாதிக்குமா?-நக்கீரன் சர்வே

Published on 22/03/2021 | Edited on 23/03/2021
ddd

 

இம்முறை அ.தி.மு.க. தொண்டர்களை மையப்படுத்தி தமிழகம் தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளையும் புறக்கணிக்கவில்லை.

 

டெல்டா மாவட்டத்தில் கோப அனல் வீசியது. ""நான் அ.தி.மு.க.வின் ஆதரவாளன். ஆனாலும் எனக்கு ஜெயலலிதா மீது சில வெறுப்புகள் உண்டு. அதே நேரத்தில் அவரது சமுதாயத்தினரை ஆடாமல் அடக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று சங்கரமடத்தின் கூடாரம் முதல் குடுமி வரை ஆடுகிறது. அதற்கு வழிவிட்டுவிட்டார் எடப்பாடி'' என கொக்கரிக்கிறார்கள் மடாலயங்களுக்கும் கோவில்களுக்கும் பெயர்பெற்ற கும்பகோணம் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பது இவர்கள், அடித்து வைத்திருக்கும் பணத்திற்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்கிற பயத்தினால்தான். அதேபோல சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றிவிடுவார். அந்த இடையூறு வராமல் இருப்பதற்கு மத்திய ஆட்சியின் தயவு தேவை. இவை அனைத்தும் தங்களுடைய பதவியை தக்கவைப்பதற்குத் தானே தவிர வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை'' என தெளிவாக எச்சரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும்.

 

""பா.ஜ.க.வை ஜெ. நிராகரித்தார். மோடி பிரதமராகவே சென்னை வந்தபோதும் எடப்பாடியைப்போல கூழைக்கும்பிடு போட்டு வரவேற்கவில்லை. பிரச்சாரத்தில் மோடியா? லேடியா? என பாட்ஷா பட ஸ்டைலில் கேள்வி கேட்டார். அந்த ஜெ. நிராகரித்த பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது சதி என 23 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். மோடிக்கு எடப்பாடி பயப்படுவது போல, இந்திராகாந்திக்கு எம்.ஜி.ஆர். பயந்தார். ஆனால் எம்.ஜி.ஆரும் ஜெ.வும் மதவாத சக்திகளை வளரவிடவில்லை. பா.ஜ.க.வுக்கு 20 சீட் வாரி வழங்கியிருக்கிறார் எடப்பாடி. பா.ஜ.க. தயவில் ஆட்சி நடத்தியவருக்கு வேற வழியில்லை'' என்கிறார் திருப்பத்தூர் கனகராஜ்.

 

ddd

 

சேலம் ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த விஜயகுமார், ""ஜெ. மறைந்த பிறகு அ.தி.மு.க. நெருக்கடிகளைச் சந்தித்தது. அப்போது பா.ஜ.க. தயவால்தான் ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது தவறில்லை'' என்கிறார்.

 

நமது கருத்துக் கணிப்பில் 31 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தவிர வேறு வழியில்லை என சொல்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி 46 சதவிகிதம் பேர் ஜெ. நிராகரிக்கிற பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தவறு என அடித்துச் சொல்கிறார்கள்.

 

ddd

 

பா.ஜ.க.வுடனான கூட்டணி நிச்சயம் அ.தி.மு.க.வை பாதிக்கும். விவசாய சட்டம் போல எண்ணற்ற சட்டங்களைப் போட்டு மக்களை வறுத்து எடுத்து வருகிறது பா.ஜ.க அரசு. நீட், பெட்ரோல் என ஏறும் விலைவாசிக்கு எதிராகப் போராட்டம் நடந்துவருகிறது. அத்துடன் பா.ஜ.க. சனாதன கொள்கையை முன்னெடுத்து தமிழகத்தில் இந்தியைத் திணித்துவருகிறது. பா.ஜ.க.வின் இந்த முயற்சிகளுக்கு அ.தி.மு.க. ஆமாம் சாமி போட்டுவருகிறது. இது அ.தி.மு.க.வுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் தர்மபுரி மக்கள்.

 

பா.ஜ.க.வுடனான கூட்டணி அ.தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்குமா என்கிற கேள்விக்கு 63 சதவிகிதம் பொது மக்கள் பாதிக்கும் என்றே தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

 

""மோடி அறிவிச்ச திட்டங்களில் ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறாரா? மக்களை அலையவிட்ட பி.ஜே.பி.யை மக்களும் அலையவிடுவாங்க'' என்கிறார் கோவை கவுசல்யா.

 

ddd

 

பி.ஜே.பி.க்கு 20 தொகுதிகள் ஒதுக்கியிருப்பது அதிகம் என 57 சதவிகிதம் பேரும் அந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் என 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. உட்பட பல கட்சிகள் இருக்கிறது. அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் மிரட்டல் தொனியில் பேசமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க.வினர் மிரட்டல் தோரணையில்தான் அ.தி.மு.க.வினரிடம் பேசுகிறார்கள்.

 

ddd

 

""மத்தியில் ஆட்சி இருக்கிறது என அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டி காரியம் சாதிக்கிறார்கள். அதுபோலத்தான் முதல்வரையும் மிரட்டி, கூட்டணி அமைத்துக்கொண்டு சீட்டுகளையும் கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள். அந்த சீட்டில் ஒரு சீட்கூட பா.ஜ.க. வர வாய்ப்பில்லை'' என்கிறார் பள்ளப்பட்டி அ.தி.மு.க. விசுவாசி ஆறுமுகம்.

 

எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளின் கடைசிக்கட்டத்தில் நிராகரித்த ஜெயலலிதாவையே அந்தக் கட்சிக்காரங்க ஏத்துக்கிட்டாங்க. ஜெயலலிதா நிராகரிச்ச பி.ஜே.பி.கூட கூட்டணி வச்சா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாதுன்னு எடப்பாடி ஏத்துக்கிட்டார்.

 

ddd

 

""சென்ட்ரல்ல இருந்து ஆட்டி வைக்கிறவங்களுக்கு 20 சீட் கூட கொடுக்கலைன்னா இங்க டங்குவாரு கழன்றுடும்ல. எடப்பாடிய ரொம்ப கெட்டிக்காரர்னு சொன்னாங்க. ஆனா ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வால அவுட் ஆகப்போகுது''ன்னு சொல்றாரு விருதுநகர் ஹைகோர்ட் ராஜன்.

 

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்..? - நக்கீரன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்!

 

-நக்கீரன் சர்வே குழு

ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.எஸ், மனோ, ராஜா, பகத்சிங், செல்வகுமார், மணிகண்டன், அருண்குமார், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ்
தொகுப்பு: -தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.