Skip to main content

"இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால், அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிற அளவிற்கு வாழ முடியும்" - நடிகர் ராஜேஷ் நெகிழ்ச்சி! #2 

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

spb

 

 

இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி சில தினங்களுக்கு முன்னால் இயற்கை எய்தினார். பல்வேறு பிரபலங்கள் அவருடனான தங்கள் அனுபவம் குறித்தும், எஸ்.பி.பி அவர்களின் அறியாத பக்கம் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜேஷ் நம்மோடு பகிர்ந்து கொண்ட தகவலின் இரண்டாம் பகுதி...

 

"நான் எஸ்.பி.பி அவர்களை பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே மாதிரியாக பணிவாக கும்பிடுவார். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று தோன்றும். குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது நினைத்து கொள்வார்களோ என்று தோன்றும். அவர் அவ்வளவு கடினமாக உழைத்துள்ளார். கடைநிலை தொழிலாளி முதல் பெரிய சாதனையாளர்கள் வரை அவர் சென்றடைந்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் பல தரப்பட்ட சோகங்களை நீக்குவதற்கு அவர் பாடல்கள் பயன்பட்டன. அமெரிக்காவில் கிளின்டன் கூட இவர் பாடலைக் கேட்டுப் பாராட்டி, நான் இந்தியா வந்தால் நீங்கள் பாடுவீர்களா என்று கேட்டார். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் சென்றடைந்திருக்கிறார். அவரால் பலனடைந்தவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இன்றும் அவரது பாடல்களைப் பாடி பல கடைநிலை இசைக்கலைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர் பாடி சம்பாதித்ததை விட, அவரது பாடல்களைப் பாடி அதிகம் சம்பாதித்தவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

 

அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள். நடிகர்கள் என அனைவரிடமும் நானே சென்று நேரடியாக பழகுவேன். ஆனால், எஸ்.பி.பி. அவர்களிடம் மட்டும் நான் பழகவேயில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு அமையவில்லை. அதை நினைத்தால் இப்போது வருத்தமாக உள்ளது. கரோனா அச்சுறுத்தல் இல்லாத சூழல் இருந்திருந்தால் அவரை மருத்துவமனையில் சென்றே சந்தித்திருப்பேன். அவர் மரணச்செய்தி கேட்டதும், மாலை வாங்கிக்கொண்டு நாங்கள் சிலர் வந்தோம். அதற்குள் அவர் உடலை கொண்டு சென்றுவிட்டார்கள். அவர் உடலைப் பார்க்க முடியாதது வருத்தமாக உள்ளது. பின் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு திரும்பினேன்.

 

நான் நடித்த படங்களில் கூட பல பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் பாடிய பாடலுக்கு நான் வாய் அசைத்திருக்கிறேன் என்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அப்துல்கலாம் அவர்கள் மறைவின்போது எவ்வளவு பெரிய எழுச்சி இருந்ததோ, அதற்கு இணையான எழுச்சி இப்போதும் இருந்தது. கரோனா காரணமாக அதன் முழுவீச்சையும் நம்மால் பார்க்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை, ரொம்ப வருத்தமாக உள்ளது என்று சிலர் என்னிடம் கூறினார்கள். அந்த அளவிற்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள். ஜேசுதாஸ் அவர்களுக்கு செய்த பாதபூஜை எல்லாம் உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே செய்ய முடியும். எவ்வளவு பெரிய குருபக்தி என்று பாருங்கள்.

 

நான் ஒரு முன்னூறு நபர்களின் வாழ்க்கை வரலாறு படித்து, 200 மனிதர்களின் நல்ல குணங்களையெல்லாம் ஒருங்கிணைத்து ராஜேஷ் என்ற ஒரு மனிதனாக என்னை உருவாக்கி கொண்டேன். அவையெல்லாம் தேவை இல்லை என்பதை எஸ்.பி.பி. அவர்களின் இறப்பின் போது உணர்ந்தேன். எஸ்.பி.பி. அவர்கள் ஒருவரை நாம் பின்பற்றினாலே, 200 மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் படிக்க தேவையில்லை. இவர் ஒருவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால், நாம் இந்த உலகத்தை விட்டுச்செல்லும்போது அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிற அளவிற்கு வாழ முடியும் என்று புரிந்து கொண்டேன்".

 

முந்தைய பகுதி 

"அனைவருமே அவரை நல்ல மனிதன் என்கிறார்கள்... இது எப்படி சாத்தியம்?" -ஆச்சரியப்படும் நடிகர் ராஜேஷ்! #1

 

 

Next Story

‘எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாத பாட்டு எது?’ - கவிஞர் வைரமுத்து ருசிகரம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய அவர், ''பரத்வாஜ் கிளப் டான்ஸ் மாதிரி ஒரு பாட்டு கொடுங்க சார் என்றார். சும்மா வாய்மொழியாக சொன்னது 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' இதெல்லாம் சரியா இருக்குமா என்று கேட்டேன். நல்லா இருக்கும் சார் என்று இசையமைத்து காண்பித்தார். எல்லாத்தையும் விட முக்கியமானது இந்திய சினிமா தோன்றி அதிகமான வரிகளால் பாடப்பட்ட பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. செஞ்சி மலை மீது அஜித் குமார் பாடிய பாட்டு; சரண் இயக்கிய பாட்டு; நான் எழுதிய பாட்டு 89 வரிகள் கொண்ட பாட்டு; எஸ்.பி.பி பாடிய பாட்டு.

 

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாது என்று நீங்கள் கருதுகின்ற பாட்டு எது என்று ஒரு தொலைக்காட்சி ட்விட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்தது இன்றைக்கு. நான் ஆச்சரியமாக புரட்டி பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ அடுத்து 'சங்கீத ஜாதி முல்லை' அடுத்து 'அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி' அடுத்து 'என் காதலே என் காதலே' நான்கும் என் பாட்டு. இது ஆச்சரியமாக இருந்தது. அதில் முக்கியமான பாட்டு 89 வரிகள் கொண்ட 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு. திரும்ப தமிழில் இப்படி ஒரு பாட்டு வரவே முடியாது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்'' என்றார்.

 

 

Next Story

100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

PV SINDHU KANGANA RANAUT

 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.