Skip to main content

"அனைவருமே அவரை நல்ல மனிதன் என்கிறார்கள்... இது எப்படி சாத்தியம்?" -ஆச்சரியப்படும் நடிகர் ராஜேஷ்! #1

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

spb

 

 

இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி. சில தினங்களுக்கு முன்னால் இயற்கை எய்தினார். மரணம் குறித்தான தகவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மறுநாள் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுவது வரை அவர் இசையை கேட்டு ரசித்தவர்களின் மனங்களில் ஒரு கனம் குடிகொண்டது. பல தரப்பட்ட சாமானிய மக்கள் சாரைசாரையாக படையெடுத்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது. இந்நிலையில் செறிவான கருத்து வளமிக்க நடிகர் ராஜேஷ், எஸ்.பி.பி குறித்து நம்மோடு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

"1968-ல் நான் சென்னை வந்தேன். அதன் பிறகுதான் அவர் அடிமைப்பெண், சாந்தி நிலையம் போன்ற படங்களில் பாடினார். சாந்தி நிலைய பாடல்களைக் கேட்கும்போது டி.எம்.எஸ். அண்ணன்தான் குரலை மாற்றிப்பாடுகிறார் என்று நினைத்தேன். பின்னர் அது எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் என்றனர். அவர் குரலையும், பாடலையும் கேட்கும் போது அதில் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. டி.எம்.எஸ்., திருச்சி லோகநாதன் போன்ற முன்னணி பாடகர்களின் அனைத்து உணர்வுகளும் எஸ்.பி.பி அவர்களிடம் ஒருசேர இருப்பதை நான் கண்டேன். 45 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். 12 மணி நேரத்தில் கன்னட மொழியில் 21 பாடல்கள் பாடியிருக்கிறார். ஒரே நாளில் தமிழில் 19 பாடல்கள் பாடியிருக்கிறார். 6 மணி நேரத்தில் இந்தியில் 16 பாடல்கள் பாடியிருக்கிறார். மொத்தமாக 16 மொழிகளில் பாடியிருக்கிறார். தேசிய விருது, மாநில விருது உட்பட பல எக்கச்சக்கமான விருதுகள் வாங்கியுள்ளார். அவர் மக்கள் மனங்களில் உயரிய இடத்தில் குடியிருந்தார் என்பது இந்த சாதனைகளையெல்லாம் விடப்பெரியது. அதை அவர் மரணமடைந்த போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் நம்மால் பார்க்க முடிந்தது.

 

52 வருடம் ஒரு மனிதன் ஒரு துறையில் கோலோச்சுவது என்பது சாதாரண விஷயமில்லை. 52 வருடங்கள் திரையுலகத்தில் கோலோச்சியிருக்கிறார். அதேபோல மருத்துவமனையில் 52 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த எண்ணிக்கை எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அனைவருமே அவரை நல்ல மனிதன் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என எனக்கு வியப்பாக இருந்தது. இதயப்பூர்வமான உள்ளன்பு இருந்தால் மட்டுமே மக்களை சென்றடைய முடியும். 'அடக்கமாகும் வரை சிலருக்கு அடக்கம் வராது' என்பார்கள். ஆனால் எஸ்.பி.பி-யிடம் அடக்கமாகும் வரை அந்த பணிவு இருந்தது.

 

வாழ்க்கையில் ஒரு மனிதனை அவன் வயது பக்குவப்படுத்தும். எஸ்.பி.பி. அவர்களின் கடந்த கால புகைப்படங்களை பார்க்கும்போது, அந்த பண்பும், பணிவும் அப்போதிலிருந்தே அவருக்கு இருந்தது தெரிகிறது. திருடன் போலீஸ் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெரிய விஷயமாக உள்ளது. இனிமேல் ஒரு எஸ்.பி.பி வருவாரா? 52 ஆண்டுகள் கொடிகட்டிப் பறப்பாரா என்பதெல்லாம் சந்தேகம்தான். ஆண், பெண் என இனவேறுபாடு, மேல்தட்டு, கீழ்த்தட்டு என வர்க்க வேறுபாடு ஏதும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவராக அவர் இருந்ததே அவரது மிகப்பெரிய வெற்றி. டீவி சத்தம் கூட பலர் வீட்டில் சத்தமாக கேட்கவில்லை. அந்த அளவிற்கு சென்னையே அடங்கியிருந்தது. லாக்டவுனுக்குள் ஒரு லாக்டவுன் என்பது போலத்தான் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய சந்தோசம்".

 

நேர்காணலின் தொடர்ச்சியை வாசிக்க...

"இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால், அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிற அளவிற்கு வாழ முடியும்" - நடிகர் ராஜேஷ் நெகிழ்ச்சி! #2  

 

 

Next Story

‘எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாத பாட்டு எது?’ - கவிஞர் வைரமுத்து ருசிகரம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய அவர், ''பரத்வாஜ் கிளப் டான்ஸ் மாதிரி ஒரு பாட்டு கொடுங்க சார் என்றார். சும்மா வாய்மொழியாக சொன்னது 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' இதெல்லாம் சரியா இருக்குமா என்று கேட்டேன். நல்லா இருக்கும் சார் என்று இசையமைத்து காண்பித்தார். எல்லாத்தையும் விட முக்கியமானது இந்திய சினிமா தோன்றி அதிகமான வரிகளால் பாடப்பட்ட பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. செஞ்சி மலை மீது அஜித் குமார் பாடிய பாட்டு; சரண் இயக்கிய பாட்டு; நான் எழுதிய பாட்டு 89 வரிகள் கொண்ட பாட்டு; எஸ்.பி.பி பாடிய பாட்டு.

 

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாது என்று நீங்கள் கருதுகின்ற பாட்டு எது என்று ஒரு தொலைக்காட்சி ட்விட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்தது இன்றைக்கு. நான் ஆச்சரியமாக புரட்டி பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ அடுத்து 'சங்கீத ஜாதி முல்லை' அடுத்து 'அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி' அடுத்து 'என் காதலே என் காதலே' நான்கும் என் பாட்டு. இது ஆச்சரியமாக இருந்தது. அதில் முக்கியமான பாட்டு 89 வரிகள் கொண்ட 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு. திரும்ப தமிழில் இப்படி ஒரு பாட்டு வரவே முடியாது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்'' என்றார்.

 

 

Next Story

100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

PV SINDHU KANGANA RANAUT

 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.