ADVERTISEMENT

17ஆம் நூற்றாண்டின் வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு..! 

02:37 PM May 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே தவசிலிங்கபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் இருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழியில் உள்ள தவசிலிங்கபுரத்தில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில், பேராசியர்கள் முனைவர் லட்சுமண மூர்த்தி, முனைவர் ஆதிபெருமாள் சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தபோது ஊரணியின் உட்பகுதியில் வில் எய்திய நிலையில் உள்ள வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, “சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்து தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கியப் பங்கு வகித்துவந்துள்ளது. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர், பூசல் காரணமாக இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது.

இந்நிலையில், தவசிலிங்கபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் 2 ½ அடி உயரமும் 1 ½ அடி அகலமும் உள்ளது. வீரன், இடது கையில் வில்லை பிடித்தபடியும் வலது கையில் அம்பு எய்தவாறும் காட்சி தருகிறான். வீரன் காலில் வீரக்கழலும் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாளுடனும் நீண்ட காதுகள், இடதுபுறம் சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தருகிறான். இச்சிற்பத்தின் மேல்பகுதி நாசிக்கூடு கொண்ட தோராணை வளைவுடன் புடைப்பு சிற்பமாக வில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை ஆய்வு செய்யும்போது, இப்பகுதியில் வில் வித்தையில் புகழ்பெற்று இறந்த போர் வீரனின் நினைவைப் பறைசாற்றுவதற்காக எழுப்பப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். இதன் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. தற்போது மக்கள் மாலைக்கோவில் என்று வழிபட்டுவருகின்றனர்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT