ADVERTISEMENT

கோடிகளை கொட்டிக்கொடுத்த நிறுவனம்; நோ சொன்ன யாஷ் - குவியும் பாராட்டுகள் 

04:05 PM Apr 30, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாக பாக்ஸ்ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் குறித்து ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துவந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு அக்ஷய் குமார் வருத்தம் தெரிவித்தார். ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஒப்பந்தகாலம் காலம் முடிவடையும்வரை அந்த விளம்பரம் ஒளிபரப்பாகும் என்றும் இனி வரும் காலங்களில் இத்தகைய விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்றும் உறுதியளித்தார். மேலும், இந்த விளம்பரத்திற்காக வாங்கிய பணத்தை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகே, இந்த சர்ச்சை மெல்ல ஓய்ந்தது.

இந்த நிலையில், இது போன்ற பான்மசாலா விளம்பரத்திற்காக ஒரு நிறுவனம் நடிகர் யாஷை சமீபத்தில் அணுகியதாகவும், அந்த விளம்பரத்தில் நடிக்க யாஷ் மறுத்துவிட்டதாகவும் யாஷின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்துவரும் தனியார் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரட்டை இலக்க கோடி மதிப்பிலான பான்மசாலா விளம்பர வாய்ப்பை சமீபத்தில் நாங்கள் மறுத்தோம். யாருடன் இணையவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். யாஷுக்கு கிடைத்துள்ள பேன் இந்தியா அந்தஸ்தை, அவரைப் பின்பற்றும் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை வழங்கவும், எங்களுடைய நேரத்தையும் வேர்வையையும் மனசாட்சியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து பயன்படுத்த விரும்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியானது முதலே நடிகர் யாஷிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT