ADVERTISEMENT

பட்டினி கிடந்து நடித்த சிவாஜி... கண் கலங்கிய இயக்குநர்!

05:55 PM Sep 13, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பான நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொழில் பக்தியில் அவருக்கு நிகர் அவர்தான். ஆரம்பக்காலம் தொடங்கி இறுதிக்காலம்வரை தான் செய்த தொழிலை 100 சதவிகித அர்ப்பணிப்புடன் செய்தவர். இதைப் பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பத்திரிகைகளிலும்கூட படித்திருக்கிறேன். ஆனால், இதை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னர் கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 'படிக்காத பண்ணையார்' என்ற திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. 'பணமா பாசமா', 'சித்தி' உள்ளிட்ட பல குடும்பப்படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் 'படிக்காத பண்ணையார்' படப்பிடிப்பு தளத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. சிவாஜி, அனுராதா சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை அன்று படமாக்கிக் கொண்டிருந்தனர். சிவாஜி கணேசனின் எதிரிகள், கவர்ச்சி நடனம் ஆடும் அனுராதா மூலம் ஊரில் கௌரவத்தோடு வாழும் பண்ணையாரான சிவாஜி கணேசனை வீழ்த்தி, அவருடைய பெயரைக் கெடுக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்கான காட்சிகள் அனைத்தையும் ஒரு பாடலாக எடுக்க கே.எஸ்.கோபால கிருஷ்ணன் முடிவெடுத்திருந்தார். பாதி காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் மதியவுணவு இடைவேளைக்குச் சென்றிருந்தனர். நான் அந்த நேரத்தில்தான் அங்குச் சென்றேன்.

அனைவரும் அங்கே சேர் போட்டு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்குச் சிவாஜி கணேசன் இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கு எங்குமே அவர் இல்லை. நான் அப்படியே ஸ்டூடியோவிற்குள் சென்றேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழே இருந்த ஷோபாவில் சிவாஜி கணேசன் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த அறையில் வேறு யாருமே கிடையாது. நான் அந்த அறைக்குள் நுழைந்த சத்தம் கேட்டவுடன் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தார். சிவாஜி கணேசனின் பார்வையைப் படங்களில் கூர்ந்து பார்த்தாலே ஒருவித பயம் வரும். நேரில் பார்த்தவுடன் பயத்தில் அந்த அறையிலிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன். என்ன சார் எல்லாரும் வெளியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... சிவாஜி கணேசன் மட்டும் உள்ளே தனியா உட்கார்ந்தது இருக்கார் என்று வெளியே இருந்த கோபாலகிருஷ்ணனிடம் சென்று கேட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு வாங்க... எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு உள்ளே சென்று அவர் அமர்ந்திருப்பதாகக் கோபால கிருஷ்ணன் கூறினார். என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன். பண்ணையார் கதாபாத்திரத்திற்காக அடர்த்தியான மீசையை அவருக்குப் பசை போட்டு ஒட்டியிருக்கிறோம். அதை எடுத்தால் அவருக்கு எரிச்சலாக இருக்கிறதாம். சாப்பிடுவதற்காக எடுத்தால் பிறகு மறுபடியும் ஒட்ட வேண்டிவரும். அதனால் எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் இரவு வீட்டில் சென்று சாப்பிட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.

எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு பட்டினியோடு இருந்து நடிக்கிறார். என்ன மனுஷன்யா இவர் என்று கோபாலகிருஷ்ணன் கூறும்போதே கண்கள் கலங்கிவிட்டன. சிவாஜி கணேசன் அர்ப்பணிப்பு பற்றி அதுவரை செவிவழிச் செய்தியாகவும் பத்திரிகைளிலும் படித்த எனக்கு, முதன்முறையாக அந்த அர்ப்பணிப்பைக் கண்கூடாகப் பார்த்தது சிவாஜி கணேசன் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. காலத்தைக் கடந்தும் திரையுலகில் சிவாஜி கணேசனின் பெயர் சாகாவரம் பெற்று நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் சிவாஜி கணேசனின் இந்த அர்ப்பணிப்புதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT