Skip to main content

விஜயகாந்தின் எதிர்காலத்தை அன்றே கணித்த எம்.ஜி.ஆர்! 

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ‘நடிகர் விஜயகாந்தின் எதிர்காலத்தை முன்னரே கணித்த எம்.ஜி.ஆர்’ என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

சில கேள்விப்படாத விஷயங்கள், நமக்குத் தெரியவரும்போது மிக ஆச்சர்யமாக இருக்கும். இது உண்மைதானா... இதை நம்பலாமா என்று நமக்குள் குழப்பமும் வரும். நடிகர் விஜயகாந்த் பற்றிய அப்படியொரு விஷயத்தை உங்களுக்குக் கூறுகிறேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக விஜயகாந்த் வருவார் என்று ஆரம்ப காலத்திலேயே கணித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது நடந்தது 1980ஆம் வருடம். அந்த சமயத்தில் ஃபிலிமாலயா பத்திரிகையில் நான் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். வடலூர் சிதம்பரம் தயாரிப்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. விஜயகாந்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிபெற்ற முதல் திரைப்படம் என்றால் அது இந்தப் படம்தான். 

 

அந்தக் காலத்தில் சேட்டிலைட் சேனல்களெல்லாம் கிடையாது. தொலைக்காட்சி என்றாலே தூதர்ஷன் சேனல் மட்டும்தான். அதில், ஒளிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் 7 பாடல்கள் போடுவார்கள். அது ஒளிபரப்பாகும்போது தெருவில் ஒரு ஆள்கூட இருக்கமாட்டார்கள். தற்போது எம்.ஜி.ஆர் நினைவு இல்லமாக இருக்கும் இடம்தான் எம்.ஜி.ஆரின் அன்றைய அலுவலகம். கோட்டையில் முதல்வர் பணிகளை முடித்துவிட்டு சாயங்கால நேரம் அலுவலகத்திற்கு வருவார். அந்தக் காலகட்டத்தில் சுபா சுந்தரம் என்பவர் பிரபல புகைப்படக் கலைஞராக இருந்தார். அவரது சுபா ஃபோட்டோ சர்வீஸ் நிறுவனம் மூலமாகத்தான் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களின் புகைப்படங்கள்  பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கும். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரை அனைவராலும் புகைப்படம் எடுத்துவிட முடியாது. சுபா சுந்தரம் மாதிரியான சில ஆட்கள் மட்டுமே அதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின் அவர்கள் வாயிலாக தங்களுக்கு வேண்டிய புகைப்படங்களைப் பத்திரிகை நிறுவனங்கள் பெற்றுக்கொள்வார்கள். நான் ஃபிலிமாலயாவில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதால் சுபா சுந்தரத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 

 

vijayakanth

 

ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், “நீ விஜயகாந்தை சந்திப்பாயா” என்றார். “என்னண்ணே விஷயம்” என்றேன். “நேற்று தலைவர் எம்.ஜி.ஆரைப் ஃபோட்டோ எடுக்க அவர் ஆஃபிஸிற்குப் போயிருந்தேன். ஃபோட்டோ எடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கையில், ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமையிலே ஒரு ராகம்...’ பாடலை ஒளியும் ஒலியுமில் கேட்டதாகவும், அதில் விஜயகாந்த் சிறப்பாக நடித்திருந்ததாகவும் எம்.ஜி.ஆர் கூறினார். பையனுக்கு நடிகருக்கான அத்தனை அம்சமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வருவான் பாருங்கள் என்றும் என்னிடம் கூறினார். பின்பு, நீங்கள் விஜயகாந்தை பார்த்தால் எம்.ஜி.ஆர் பாராட்டிய விஷயத்தை அவரிடம் கூறுங்கள்” என என்னிடம் கூறினார். தற்போது உள்ளது போல தகவல் தொடர்பு வசதி அந்த சமயத்தில் பரவலாக இல்லை. விஜயகாந்தும் வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தார். அதனால், இந்தச் செய்தியை விஜயகாந்த்திடம் உடனடியாகத் தெரிவிக்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து, விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் இந்த விஷயத்தை விஜயகாந்திடம் தெரிவிக்கும்படி நான் கூறவும், அவர் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. இரு கைகளையும் உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்து அல்லாவிற்கு நன்றி தெரிவித்தார். 

 

இந்த சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று எம்.ஜி.ஆர், சுபா சுந்தரம் இருவரும் உயிரோடு இல்லை. ஒரு கட்டத்தில், எம்.ஜி.ஆர் கூறியதுபோல ரஜினிகாந்திற்கு அடுத்து மிகப்பெரிய கமர்ஷியல் கதாநாயகன் என்ற அந்தஸ்துடன் விஜயகாந்த் கொடிகட்டிப் பறந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் கணிப்பை நினைத்துப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய ஆச்சர்யமும், அளவற்ற மரியாதையும் உண்டாகிறது. எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கத்தரிசி என்று கூறுவார்களே, அதற்கு இதுவும் ஓர் உதாரணம்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".