தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் ஷாருக்கானின் 'பதான்' படம் குறித்தும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக கேரளாவில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ்ராஜ் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் குறித்து, "இப்படம் முட்டாள்தனமான படங்களில் ஒன்று. ஆனால், அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு வெட்கமே கிடையாது. படத்தை பார்த்த சர்வதேச ஜூரி அவர்கள் மூஞ்சில் காரி துப்புவது போல் விமர்சித்தார். இந்த சூழலில் அப்படத்தின் இயக்குநர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை எனக் கேள்வி கேட்கிறார். நான் சொல்கிறேன். ஆஸ்கர் இல்லை, ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் திரைப்படமான தி காஷ்மீர் பைல்ஸ் படம் சில பேரை தூக்கமில்லாமல் செய்துள்ளது. அதில் ஒருவரான பிரகாஷ்ராஜை ஒரு வருடம் கழித்தும் தொந்தரவு கொடுத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.