தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித், தற்போது விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கர்நாடகாவில் நடந்து வந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் தற்போது சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் விக்ரம். தற்போது சென்னை படப்பிடிப்பு நடப்பதால், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எதாவது புகைப்படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் இசைப் பணிகள் குறித்து ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தங்கலான் படத்திற்காக தற்போது வரை இரண்டு பாடல்களை பதிவு செய்து முடித்துள்ளேன். இரண்டு பாடல்களும் நல்ல விதமாக வந்துள்ளது. அதில் சர்வதேச தரத்திலான ஆடியோவை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கு முன்னாள் இதை நான் முயற்சித்தது இல்லை." என குறிப்பிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணைந்துள்ளது படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் தற்போது சர்வதேச தரத்தில் ஆடியோ அமைந்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.