தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வலம் வந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. ஷாருக்கான், மோகன்லால், விக்ரம், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் தெலுங்கு பதிப்பிற்கு குரல் கொடுத்து பிரபலமான இவர் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
ஸ்ரீனிவாச மூர்த்தி, நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் சூர்யா, "இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய இழப்பு. தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது ஸ்ரீனிவாச மூர்த்தியின் குரல் மற்றும் எமோஷன்ஸ் தான். உங்களை மிஸ் செய்வேன்." என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது இரங்கல் பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நண்பர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது காந்தக் குரல் தெலுங்கில் எனது கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையும் அழகையும் அளித்தது. குறிப்பாக எங்கள் அந்நியன் பட பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. இது எப்போதும் அன்புடன் நினைவில் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ஒரு நிகழ்ச்சியில் அந்நியன் படத்துக்கு ஸ்ரீனிவாச மூர்த்தி டப்பிங் பேசும் காணொளியை பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.