இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் இதில் கலந்து கொள்வதற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் கேரளா சென்றார். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன.
மேலும், அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான கேரளா ரசிகர்கள் குவிந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர், அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி நின்று, அங்கிருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசினார்.
அதில் அவர், “சேச்சி.. சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அந்த அளவுக்கு உங்கள் முகத்தில் தற்போது மகிழ்ச்சியை பார்க்கிறேன். எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள நண்பா, நண்பிகள் மாதிரி நீங்களும் வேற லெவல்” என மலையாளத்தில் பேசினார். விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.