நரை முடி, நரை தாடியுடன் கையில் ஒரு பையுடன் நடந்து வரும் எளிமையான முதியவரின் படமொன்று 'கடைசி விவசாயி' படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம் என்ற பெயரில் பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பைப் பாராட்டித் தள்ளியதோடு அதை ஷேர் செய்யும் தங்கள் தார்மீகக் கடமையை தீவிரமாக செய்தார்கள். நம்பியவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் மிக வித்தியாசமாக இருந்தது. அவர் என்று யாராலும் எளிதில் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் இதுவும் உண்மை என்று நம்பினார்கள். துயரம் என்னவெனில், இந்தப் புகைப்படத்தை ஒரு செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றின் சமூக வலைதள பக்கமும் விஜய் சேதுபதி என்று குறிப்பிட்டு பகிர்ந்ததுதான்.
சீதக்காதி
உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞரும் இலக்கிய ஆர்வலருமான க்ருஷி. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தபோழுது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இவ்வாறு பரவியது. இதற்கு முன்பும் பல படங்களுக்கு ரசிகர்களே ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலிருந்து ட்ரைலர் வரை அனைத்தையும் உருவாக்கி வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், இன்றோ இப்படி ஒரு நகைச்சுவை சமூக ஊடக வட்டத்தில் இன்று நிகழ்ந்துள்ளது.
புகைப்படத்துடன் அடிபட்ட திரைப்படமான 'கடைசி விவசாயி', இயக்குனர் 'காக்கா முட்டை' மணிகண்டன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிவரும் திரைப்படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி காது கேளாத ஒரு வயதான விவசாயி பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.