'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதிப்படுத்தி இருந்தார். ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'தலைவர் 169' படத்திற்கு 'ஜெயிலர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் 'ஜெயிலர்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், " நெல்சன், வா நண்பா வா. தலைவரோட பெஸ்ட் படமா இது இருக்கும் " என குறிப்பிட்டு நெல்சன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.