வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விடுதலை பாகம் 1'. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. படத்தைப் பார்த்த திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தனர். மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். முன்னதாக இப்படத்திற்காக 20 நாள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் விரைவில் தொடங்கி முடித்துவிடுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அவர் ஏற்றிருந்த குமரேசன் கதாபாத்திரத்திற்குத் தயாராகி வருவதை ஒரு வீடியோவாக வெளியிட்டு, "குமரேசன் ரெடி" எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.