உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் கரோனா பரவும் என்று பரவிய வதந்தியினால் பலரும் தங்களுடைய செல்லப் பிராணிகளை வெளியே ஆதரவின்றி விட்டுவிடுவதை கண்டித்து, பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
ADVERTISEMENT
ADVERTISEMENT
"இது மனித குலத்துக்கு மட்டுமல்லாது, அனைத்து உயிரினங்களுக்குமே கடினமான ஒரு காலகட்டமாகும். தங்கள் செல்லப் பிராணிகள் மூலம் வைரஸ் பரவும் என்று பயந்து மக்கள் அவற்றைக் கைவிடுவதாக வரும் செய்திகள் இதயத்தை நொறுக்குகின்றன. இந்த நம்பிக்கை பொய் என்று எண்ணற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் நாம் மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. நம்முடைய நண்பர்களான விலங்குகள் மீதும் அன்பைப் பொழிவோம். இந்த ஊரடங்கில் நாம் தொடர்ந்து வீட்டில் இருக்கும் தருணத்தில் அவை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரையும் நேசிப்போம். அனைத்தும் முடிந்த பிறகு முன்பைவிட, அதிக வலிமையுடன் நமது செல்ல பிராணிகளுடன் இந்த அச்சுறுதலில் இருந்து வெளியே வருவோம்" என பதிவிட்டுள்ளார்.
Show comments