கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று (15.09.2022) வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சிம்பு, கௌதம் மேனன், ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான மனோபாலா, வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அற்புதமான படம். ஹாட்ஸ் ஆஃப். உன்ன ஒன்னும் பண்ண முடியாது" என குறிப்பிட்டு சிம்புவை டேக் செய்துள்ளார். பின்பு சிம்பு, மனோபாலாவின் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் சிம்புவை வைத்து 'பத்து தல' படத்தை இயக்கி வரும் இயக்குநர் கிருஷ்ணா, "பிரமிக்க வைக்கும் படத்தை கௌதம் மேனன் சார் கொடுத்துள்ளார். சிம்பு கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். இதனால் எனக்கு மிகவும் பொறுப்பு அதிகமாகியுள்ளது" என குறிப்பிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இவர்களை தொடர்ந்து 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் படத்தை பாராட்டியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "திரையில் தன்னை அழுத்தி நிறுத்தியுள்ளார். சிம்பு நடிப்பின் மெருகேற்றம் அவரைத் தூக்கிப் பிடிக்கிறது. திறமைமிக்கவர் என்பதை மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார். வாழ்த்துகள்." என பதிவிட்டுள்ளார்.