சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களைத் தாண்டி லதா ரஜினிகாந்த்,தனுஷ், ரம்யா கிருஷ்ணன், அனிருத் பாடகர் விஜய் யேசுதாஸ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுபு, உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி ட்விட்டரில் ரஜினி குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "எனது கரியரில் ஜெயிலர் மிக முக்கியமான மைல்கல் படங்களில் ஒன்று. பல ஆண்டுகளாக நான் திரையுலகில் வளர்த்து வந்த முழு அர்ப்பணிப்பு, பொறுமை, ஆகியவை இந்தப் படத்தில் இருக்கிறது. இந்த 6 வருட திரைப்பயணம் பெரிய அனுபவங்கள் நிறைந்து சினிமா வாழ்க்கையில் வழிகாட்டியாக இருந்துள்ளது. இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என்று ஆகஸ்ட் 11, 2017 வெளியான தரமணி படத்தில் அறிமுகப்படுத்தியதிலிருந்து, அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் சாரின் மகனாக ஜெயிலரில் இன்று ஆகஸ்ட் 10, 2023 அடியெடுத்து வைத்த வரை, இந்த திரைப்பயணத்தை பிரபஞ்சத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசாக உணர்கிறேன்.
ரஜினி சார், எனது திரை வாழ்க்கை தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக என்னை ஊக்குவித்தும், ஆதரவளித்தும் வந்தார். அவருடன் படப்பிடிப்பு தளத்தில் செலவழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் மறக்க முடியாத நினைவாக மாறிவிட்டது. அவர் சொல்லிக் கொடுத்த போதனைகள் எனது நடிப்பிற்கு மட்டுமல்ல மனிதநேயத்தையும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும் வளப்படுத்தியுள்ளது. நான் எப்பொழுதும் உங்களை 'சார்' என்று அழைத்தாலும், இன்று உங்களை அப்பா என்று அழைப்பதை ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.