உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்துக் கொண்டு மக்களுக்கு வீடியோ மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகை வரலட்சுமி பெண்கள் மீதான குடும்ப வன்முறை குறித்து சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...
"இது பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த லாக் டவுனில் குடும்பக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தப்பிக்க வழியில்லாமல் வீட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஹெல்ப் லைன் இருக்கிறது. அந்த நம்பர் 1-800-102-7282. இந்த நம்பருக்கு அழைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உதவி செய்வார்கள். உங்களுக்குத் தெரிந்த அத்தனை பெண்களுக்கும் இந்த எண்ணைக் கொடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் கூட அவர்கள் வீட்டில் இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கலாம். சீக்ரெட்டாக கொடுங்கள், குழந்தைகள் முன் கொடுக்காதீர்கள். அவர்கள் தப்பித்தவறி போய் சொல்லிவிட்டால் அதுவும் பிரச்சினையாகிவிடும். அவர்கள் தனியாக இருக்கும்போது கொடுங்கள். இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர்கள், படிக்காதவர்கள் பார்த்துப் பண்ணக்கூடிய விஷயமல்ல. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தத் தொலைப்பேசி எண்ணை அனைவருக்கும் பரப்புங்கள். உதவி தேடி வரும். பாதுகாப்பாக இருங்கள்" எனக் கூறியுள்ளார்.