எலான் மஸ்க் ட்விட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலைப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியது தொடர்பாக திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் தொடர்ந்து அரசியல் குறித்து வலதுசாரி மற்றும் இடதுசாரிப் பார்வையாளர்கள் தங்களது கருத்தை முன்வைத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் உண்மைத் தன்மையை ஆராயாமலும், உறுதி செய்யாமலும் தகவல்களையும் பரப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.