இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்தவகையில் நடிகரும் இயக்குநருமான டி.பி. கஜேந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் டி.பி கஜேந்திரன் தனக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்," நான் நலமாக இருக்கிறேன். எனக்கு கரோனா இல்லை. கரோனா இருப்பதாக வெளியான செய்திகள் புரளி" எனத் தெரிவித்துள்ளார்.