ADVERTISEMENT

“முதலில் அரசு அதிகாரிகள் இதைச் செய்கிறார்களா?” - தங்கர் பச்சான்

01:19 PM Dec 28, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்தை கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் தங்கர் பச்சான் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டம் குறித்து அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "அரசு பள்ளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்த முயற்சி இந்தத் திட்டம். செல்வம் உடையவர்கள், பெரிய வணிகர்கள் இந்தத் திட்டத்துக்கு பணம் தந்து உதவுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி பண உதவி கொடுத்தால் தரமான மேஜை, தரமான நாற்காலி, பெரிய கட்டடங்கள் என பள்ளிக்கூடக் கட்டமைப்பு தான் மேம்படும். பள்ளிக்கல்வி ஒரு தரமாக மேம்படாது.

மக்களுக்கு பள்ளிகள் மீது என்ன சிக்கல் என்றால், அரசு பள்ளிகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எப்போது தமிழை மறந்து வேறு மொழியின் ஆதிக்கம் வந்ததோ, அப்போதே நம்முடைய தமிழ் மொழிக் கல்வி மறைந்துவிட்டது. அதனால், மக்கள் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே, வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு கல்லூரிகளிலும் முன்னுரிமை வேண்டும். இப்படி ஒரு சட்டத்தை அரசு அறிவித்தால் தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும். இதன் மூலம் மக்களும் நம்பிக்கையோடு ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இதைச் செய்யாமல் வெறும் பணத்தை மட்டுமே வாங்கி பள்ளியின் தரத்தை உயர்த்த முடியாது.

அரசு, மக்களுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு அமைச்சரோ, ஆளுநரோ அல்லது முதலமைச்சரோ உடல்நிலை சரியில்லாத போது எங்கே போகிறார்கள்? அரசு மருத்துவமனைக்கா செல்கிறார்கள்? முதலில் தனியார் மருத்துவமனைக்கு தான் செல்கிறார்கள். இதுவரை இருந்த எல்லா முதல்வர்களும் அப்படித்தான். இதைப் பார்க்கையில் அரசு மருத்துவமனைகள் எதற்காக நடத்தப்படுகிறது... அதனால் அவர்கள் முதலில் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். இதன் மூலம் அரசு மருத்துவமனையின் தரம் தானாக உயரும். அதே போலத்தான் நமது பள்ளிகளும்.

பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல பேர் அரசு பள்ளிகளில் படித்து முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். அதனால் தமிழக அரசு, அரசு ஊதியம் வாங்குகின்ற அமைச்சர், நீதிபதி, காவல்துறையினர் என அனைவரையும் அவர்களது அடுத்த தலைமுறையினரை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். அந்த சட்டம் தான் சரியானதாக இருக்கும். மேலும், அரசு அதிகாரிகள் மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, காசு கொடுங்கள் என்றால் உயராது. இதனை ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் எப்போதே செய்துவிட்டது" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT