ADVERTISEMENT

“இதற்கு அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிறார்கள்” - இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை 

11:16 AM Mar 30, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கெளதம் மேனன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் செல்ஃபி திரைப்படத்தை வெகுவாகப் பாரட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டபின் தமிழ்நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகிறது. இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் ’செல்பி’ திரைப்படம்.

மதிமாறன் எனும் புதிய இயக்குநரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுப்படுத்தும்.

முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர்நாயகன் பாத்திரத்தில் கெளதம் மேனன் நடிப்பதுதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகிறது. திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குநரின் திறனை பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள்தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன. ’செல்பி’ அதனை திறம்படச் செய்திருக்கிறது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT