ADVERTISEMENT

ஷங்கர் டீமில் இணைந்த 'புட்ட பொம்மா' புகழ் தமன்!

02:00 PM Jul 20, 2021 | santhosh

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், கடைசியாக இயக்கிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் படம் இயக்கவுள்ளார். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

ADVERTISEMENT

இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இது நடிகர் ராம் சரணின் 15வது படமாகும். இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் எஸ்.எஸ். தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தமன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் குறித்து இசையமைப்பாளர் தமன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"2000 முதல் 2021 வரை சினிமா கடந்து ஷங்கரின் அறிவியல் மற்றும் வாழ்க்கை குறித்த சிந்தனையை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த அற்புதமான மனிதருக்குப் பின்னால் இப்போதும் அதே சக்தியையும் ஒளியையும் நான் பார்க்கிறேன். ’#RC15’ படக்குழுவில் இசையமைப்பாளராக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘நாயக்’, ’ப்ரூஸ் லீ’ படங்களுக்குப் பிறகு ராம் சரணுக்கு என்னுடைய அன்பைக் காட்டும் நேரம் இது. எப்போதும் அன்பையும் அதீத உற்சாகத்தையும் கொண்ட மனிதர் அவர். அருமையான மனிதர் மற்றும் சகோதரர். லவ் யூ சகோதரா. என்னுடைய சிறப்பான உழைப்பை வழங்குவேன். என்னை ஒரு இளைய சகோதரனாக நினைத்து எனக்கும், என்னுடைய இசைக்கும் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்திவரும் தில்ராஜுவும் அவருடைய தயாரிப்புக் குழுவினரும் நிறைய அன்பும் ஆதரவும் அளிக்கின்றனர். ஒரு குழுவாக இணைந்து இந்த '#RC15' படத்தை நினைவில் நிற்கக்கூடிய ஒன்றாக உருவாக்குவோம்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT