விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விஜய் மற்றும் லோகேஷை சந்தித்தேன். அதே எனர்ஜியுடனும் முழு முனைப்போடும் இருக்கிறார்கள். முதல் நாளே தூளாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தளபதி 67' படத்தைப் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வெளியாகாத நிலையில் மனோபாலா தற்போது படத்தைப் பற்றி கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. வாரிசு படம் வெளியான பிறகு விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.